திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகராட்சி கோட்டை வீதியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் தலைமையாசிரியர் உட்பட 50க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகளும் பயின்று வருகின்றனர்.
தமிழ்நாட்டில் தற்போது கரோனா மற்றும் ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கபட்டு உள்ளது.
கரோனா பரிசோதனை
இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் 9ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. மேலும் மாவட்ட ஆட்சியர் அரசு பள்ளிகளில் சுழற்சி முறையில் மாணவ, மாணவிகளுக்கு கரோனா தொற்று பரிசோதனை செய்ய உத்தரவிட்டுள்ளார்.
20 பேருக்கு கரோனா
அதன் அடிப்படையில் ஆரணி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் எஸ்.வி.நகரம் ஆரம்ப சுகாதார நிலையத்தை சேர்ந்த மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர். அதில் 2 ஆசிரியை உட்பட 20 மாணவிகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பள்ளி முழுவதும் தூய்மைப் பணியாளர்கள் சுத்தம் செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: சென்னையில் இளம்பெண் மருத்துவர் தற்கொலை