தமிழ்நாடு

tamil nadu

Nainar Balaji:ரூ.100 கோடி பத்திரப் பதிவு ரத்து; அரசியல் காழ்ப்புணர்ச்சியே காரணம் - நயினார் பாலாஜி பேச்சு

By

Published : Jul 20, 2023, 10:02 PM IST

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தனது பத்திரப் பதிவு ரத்து செய்யப்பட்டதாகவும், இது தொடர்பாக நீதிமன்றத்தில் முறையிட உள்ளதாகவும் நயினார் பாலாஜி தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

நயினார் பாலாஜி செய்தியாளர்கள் சந்திப்பு

திருநெல்வேலி:தமிழ்நாடு பாஜக சட்டமன்ற குழுத் தலைவரும் திருநெல்வேலி தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினருமான நயினார் நாகேந்திரனின் மகன் நயினார் பாலாஜி, பாஜகவில் மாநில இளைஞரணி துணைத் தலைவராக உள்ளார். இந்த நிலையில், பாஜக நிர்வாகி நயினார் பாலாஜி சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ரூ.100 கோடி மதிப்புள்ள நிலத்தை மதுரையைச் சேர்ந்த இளையராஜா என்பவருடன் சேர்ந்து மோசடியாக பத்திரப்பதிவு (Nainar Balaji land Registration issue) செய்திருப்பதாக அறப்போர் இயக்கம் (Arappor Iyakkam) கடந்த ஆண்டு நயினார் பாலாஜி மீது குற்றம்சாட்டி சுமத்தி இருந்தது.

மேலும், இளையராஜா சட்டத்துக்கு புறம்பாக திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் (Madurai Meenakshi Amman temple Lands) இடத்தையும் அதனுடன் சேர்ந்து விருகம்பாக்கம் இடத்தையும் நயினார் பாலாஜிக்கு கிரயம் செய்து கொடுத்ததாக கூறப்பட்டது.

இந்த நிலையில் நயினார் பாலாஜி பெயரில் பத்திர பதிவு செய்யப்பட்ட உத்தரவை இன்று (ஜூலை 20) பத்திர பதிவுத்துறை துணைத் தலைவர் அதிரடியாக ரத்து செய்துள்ளார். பாஜகவின் முக்கியப் பொறுப்பில் இருக்கும் நயினார் பாலாஜி ரூ.100 கோடிக்கு மோசடி செய்திருப்பதாக வெளியான இந்த குற்றச்சாட்டு தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, தன் மீதான குற்றச்சாட்டு குறித்து பாஜக மாநில இளைஞரணி துணைத் தலைவர் நயினார் பாலாஜி திருநெல்வேலியில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், நீதிமன்ற உத்தரவு இருக்கும் நிலையில் அதனையும் மீறி பத்திர பதிவுத்துறை அதிகாரிகள் என்னுடைய கிரய ஒப்பந்த பத்திரப் பதிவை ரத்து செய்துள்ளதாகவும், விருகம்பாக்கத்தில் உள்ள சார்பதிவாளர் இடம் தடையில்லா சான்றிதழ் பெற்று அரசு வழக்கறிஞரிடம் சான்று பெற்றுக்கொண்டுதான் இந்த கிரய ஒப்பந்த பத்திரப்பதிவை தான் செய்ததாக அவர் தெரிவித்தார்.

மேலும், தான் ஏதும் அறியாத ஒரு அப்பாவி; நிலம் வாங்குபவர் என்றும்; நீதிமன்றத்தின் மூலம் குலோப் தாஸ் நாராயணதாஸ் சொத்தை அவரது வாரிசுகள் மூலம் இளையராஜா என்பவர் உதவியுடன் சொத்தை வாங்குவதற்கான முன்பண கிரய ஒப்பந்தம் செய்து உள்ளதாகவும் கூறினார்.

சட்டரீதியாக உண்மையான வாரிசுதாரர்கள் நீங்கள்தான் என பத்திரப்பதிவுத்துறை அதிகாரி சத்யபிரியா, கடந்த 23.11.2022-ல் தெரிவித்து இதனை ரத்து செய்வதற்கு அதிகாரம் கிடையாது என தெரிவித்திருந்ததாக கூறினார். இந்நிலையில் அதே அதிகாரி தற்போது இதனை ரத்து செய்துள்ளது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகத்தான் என எண்ணத் தோன்றுவதாகவும், இது சம்பந்தமாக நீதிமன்றத்தில் முறையிட உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரனின் மகன் நயினார் பாலாஜியின் பத்திரப்பதிவு ரத்து

ABOUT THE AUTHOR

...view details