தமிழ்நாடு

tamil nadu

தூத்துக்குடியில் நாளை மெகா மருத்துவ முகாம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 23, 2023, 3:51 PM IST

Ma Subramanian in Nellai: வெள்ளம் பாதித்த நான்கு மாவட்டங்களில் 2 ஆயிரத்து 682 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, அதில் 95 ஆயிரத்து 127 நபர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

நெல்லையில் அமைச்சர் மா சுப்பிரமணியன் செய்தியாளர் சந்திப்பு
நெல்லையில் அமைச்சர் மா சுப்பிரமணியன் செய்தியாளர் சந்திப்பு

நெல்லையில் அமைச்சர் மா சுப்பிரமணியன் செய்தியாளர் சந்திப்பு

திருநெல்வேலி:நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெள்ளநீர் புகுந்த இடங்கள், மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவு, டிஜிட்டல் எக்ஸ்ரே பிரிவு உள்ளிட்ட பகுதிகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (டிச.23) ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு உடனிருந்தார்.

தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் தூத்துக்குடி மாவட்டம் அதிக பாதிப்பைச் சந்தித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. தரைத்தளத்தில் ஆறு முதல் ஏழு அடி உயரத்திற்கு தண்ணீர் வந்த நிலையில், அங்குள்ள கேத் லேப் பாதிக்கப்பட்டுள்ளது.

அதனை சரி செய்ய ஒரு மாத கால ஆகும். அதுவரை, திருநெல்வேலி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படும். வெள்ளம் பாதித்த தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் 2 ஆயிரத்து 682 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, 95 ஆயிரத்து 127 நபர்களுக்கு தற்போது வரை சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அதில், 764 பேர் காய்ச்சல் இருப்பதாக கண்டறியப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

2,565 நபர்களுக்கு சளி உள்ளிட்ட நோய்கள் இருப்பது கண்டறியப்பட்டு, அவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவ முகாமை பல நாட்கள் தொடர்ந்து நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இவை தவிர, 93 நடமாடும் மருத்துவ முகாம்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் நடத்தப்படுகிறது. இந்த நான்கு மாவட்டங்களிலும் சேர்த்து 190 நடமாடும் மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகிறது.

இதில் ஒரு மருத்துவர் உள்ளிட்ட நான்கு மருத்துவ ஊழியர்கள் பணியில் இருப்பார்கள். வெள்ளம் அதிகம் பாதித்த பகுதிகளான ஏரல், ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி மாநகராட்சி, காயல்பட்டிணம் ஆகிய இடங்களில் அப்பல்லோ மீனாட்சி மிஷன் உள்ளிட்ட 17 தனியார் மருத்துவமனைகளுடன் இணைந்து மெகா மருத்துவ முகாம் நாளை (டிச.23) காலை 9 மணியில் இருந்து மாலை 4 மணி வரை நடத்தப்படுகிறது.

நெல்லை மாவட்டத்திலும் தேவைப்பட்டால் மெகா மருத்துவ முகாம் நடத்தப்படும். கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து தூத்துக்குடி மாவட்டத்திற்கு சிகிச்சை அளிக்க 50 முதுநிலை மருத்துவர்கள் கூடுதலாக வரவழைக்கப்பட்டுள்ளனர். மழை பாதித்த 4 மாவட்டங்களில் மருத்துவ கட்டட கட்டமைப்பு, மருந்துகள் என 315 இடங்களில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

இதனை சரிசெய்யும் பணிகள் நடந்து வருகிறது. இவை அனைத்தையும் கணக்கெடுத்து, உடனடியாக சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். ஏரல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தற்போது வரை மின் இணைப்பு வழங்கப்படாத நிலையில் கூட, அங்கே ஒரு சுகப்பிரசவம் நடைபெற்றுள்ளது. மருத்துவப் பணிகள் தீவிரமடைந்துள்ளது.

தமிழகத்தில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் தற்போது வரை 8,545 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் 10 முதல் 12 ஆயிரம் வரை டெங்கு காய்ச்சல் பாதிப்பு உள்ள நிலையில், இந்த ஆண்டு பாதிப்பு குறைந்துள்ளது. டெங்கு பாதிப்பை பொறுத்தவரை, முழுகட்டுப்பாட்டில் உள்ளது. கரோனா பரவல் தமிழகத்தில் பெரிய அளவில் இல்லை. அதனையும் கண்காணித்து தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என தெரிவித்தார்.

நெல்லை மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்த பின்னர், பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரியை ஆய்வு செய்தார். பின்னர், நெல்லையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

இதையும் படிங்க:ஆத்தூர் வெற்றிலைக்கு வந்த சோதனை.. கனமழையால் சேதம்.. வாழ்வாதாரம் காக்க விவசாயிகள் கோரிக்கை!

ABOUT THE AUTHOR

...view details