தமிழ்நாடு

tamil nadu

பல் பிடுங்கிய விவகாரத்தில் 4 பிரிவுகளின் வழக்குப்பதிவு - மாவட்ட ஆட்சியரிடமும் விசாரணையா?

By

Published : Apr 18, 2023, 4:46 PM IST

நெல்லையில் விசாரணைக் கைதிகளின் பல் பிடுங்கிய விவகாரத்தில், பல்வீர் சிங் மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாக நெல்லை மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் கூறியுள்ளார்.

பல் பிடுங்கிய விவகாரம்.. மாவட்ட ஆட்சியரிடமும் விசாரணையா?
பல் பிடுங்கிய விவகாரம்.. மாவட்ட ஆட்சியரிடமும் விசாரணையா?

நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் பேட்டி

திருநெல்வேலி:அம்பாசமுத்திரம் சரக காவல் உதவி கண்காணிப்பாளராக இருந்த பல்வீர் சிங், விசாரணைக் கைதிகளின் பல்லை பிடுங்கி துன்புறுத்தியதாக கூறப்படும் விவகாரத்தில், மூத்த ஐஏஎஸ் அதிகாரி அமுதா, உயர்மட்ட விசாரணையை மேற்கொண்டு வருகிறார். அம்பாசமுத்திரம் தாலுகா அலுவலகத்தில், நேற்று (ஏப்ரல் 17) நடைபெற்ற இரண்டாம் கட்ட விசாரணையில், பாதிக்கப்பட்ட செல்லப்பா, இசக்கி, முத்து, அருண் குமார், வேத நாராயணன், சுபாஷ். எம்.மாரியப்பன் மற்றும் 2 சிறார்கள் உள்பட 10 பேர் ஆஜராகி இருந்தனர்.

நேற்று காலை 10 மணிக்குத் தொடங்கிய இந்த விசாரணை, நள்ளிரவு 12 மணி வரை நீடித்தது. தொடர்ந்து, நேற்று 7 பேரை விசாரித்து முடித்த நிலையில், இரவு 12 மணிக்கு விசாரணை அதிகாரி அமுதா, தனது விசாரணையை முடித்துக் கொண்டார். இதனால் வேத நாராயணன், எம்.மாரியப்பன் மற்றும் சுபாஷ் ஆகிய மூன்று பேரிடம் மட்டும் நேற்று விசாரணை நடத்த முடியாததால், இன்று விசாரணைக்கு ஆஜராகும்படி அதிகாரி அமுதா கூறி இருந்தார்.

இதன் அடிப்படையில், இன்று இரண்டாவது நாள் விசாரணை நடைபெற்றது. இதற்காக காலை 10.40 மணிக்கு விசாரணை அதிகாரி அமுதா, வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்தார். இதனைத் தொடர்ந்து, நேற்று நேரமின்மையால் ஆஜராகாத 3 பேரும், தங்களது வழக்கறிஞர் மகாராஜன் தலைமையில் விசாரணைக்கு ஆஜராகி உள்ளனர். இதில், முதலில் மாரியப்பனிடம் விசாரணை நடைபெற்று முடிந்துள்ளது. தொடர்ந்து வேத நாராயணன் மற்றும் சுபாஷ் ஆகிய இருவரிடமும், அதிகாரி அமுதா விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் விசாரணை நடைபெறும் அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு, நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் திடீரென வந்துள்ளார். மாவட்டத்தின் பொறுப்பு அதிகாரி என்ற முறையில், இந்தச் சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியரிடமும், விசாரணை அதிகாரி அமுதா சில விளக்கங்களை கேட்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இன்று மாலையுடன் 2ஆம் கட்ட விசாரணை நிறைவு பெற உள்ளது.

இதனிடையே நெல்லையில் காணாமல் போன செல்போன்களை மீட்டு, அதை உரியவர்களிடம் ஒப்படைக்கும் பணி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (ஏப்ரல் 18) நடைபெற்றது. இதில், நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன், 18.6 லட்சம் ரூபாய் மதிப்பு உடைய 118 செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்தார்.

இதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த சிலம்பரசன், “அம்பை காவல் நிலையத்தில் ஏஎஸ்பி பல்வீர் சிங் பல் பிடுங்கி சித்ரவதை செய்த விவகாரம் புலன் விசாரணையில் இருப்பதால், அது தொடர்பாகப் பேசினால் விசாரணை பாதிக்கும்.

இது சம்பந்தமாக பல்வீர் சிங் மீது 4 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தின் அனைத்து காவல் நிலையங்களிலும், சிசிடிவி கேமராக்கள் முறையாக செயல்படுவது குறித்து தொடர்ந்து கண்காணிக்க அறிவுறுத்தல் வழங்கி உள்ளேன்” எனத் தெரிவித்தார். முன்னதாக, நேற்று ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது 3 பிரிவுகளின் கீழ் மட்டுமே வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியான நிலையில், தற்போது அவர் மீது நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாக எஸ்.பி. தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:பல் பிடுங்கிய விவகாரம்:2ஆம் கட்ட விசாரணையில் மூன்று பேர் ஆஜர்

ABOUT THE AUTHOR

...view details