தேனி: நகராட்சி அலுவலகத்தில் இன்று மாதந்திர நகர்மன்ற கூட்டம் நடைபெற்றது. தேனி நகர்மன்ற தலைவர் ரேணுகா பிரியா பாலமுருகன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் 33 வார்டுகளைச் சேர்ந்த கவுன்சிலர்கள் கலந்து கொண்டு ஆலோசனையில் ஈடுபட்டனர்.
அப்போது அதிமுக, பாஜக கட்சியை சேர்ந்த 6 கவுன்சிலர்கள் தங்கள் பகுதியில் எந்த திட்டமும் செயல்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக கூறி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். பின்னர் நகராட்சி அலுவலக நுழைவாயில் முன்பு அதிமுக, பாஜக கட்சியை சேர்ந்த ஆறு கவுன்சிலர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நலத் திட்டங்களை செயல்படுத்த நகராட்சியில் நிதி இல்லை என்று கூறியதால் பொதுமக்களுக்கு எந்தத் திட்டங்களும் செயல்படுத்த முடியவில்லை எனக்கூறி, பொதுமக்களே பிச்சை போடுங்கள் என கோஷங்களை எழுப்பி பொதுமக்களிடம் வார்டு உறுப்பினர்கள் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.