தமிழ்நாடு

tamil nadu

காதலியின் கல்யாணத்தை நிறுத்த நூதன முயற்சி.. நண்பனுடன் சேர்ந்து கம்பி எண்ணும் காதலன்.. தேனியில் நடந்தது என்ன?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 6, 2023, 6:00 PM IST

Theni Crime News:தேனி மாவட்டம் போடி அருகே காதலித்த பெண்ணின் திருமணத்தை நிறுத்த பெண்ணின் தந்தையை கொலை செய்ய முயன்ற காதலன் மற்றும் அவரது நண்பருக்கு நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

Two men stabbed girlfriend's father
காதலியின் தந்தையை கத்தியால் குத்திய இருவர்

தேனி:போடிநாயக்கனூரை சேர்ந்த சுருளிராஜ் என்பவரது மகள் சுபாஷினி, இவரை போடி அருகே உள்ள அணைக்கரைப்பட்டியை சேர்ந்த கார்த்திக் என்பவர் காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் மகள் சுபாஷினிக்கு வேறொரு இடத்தில் திருமணம் செய்து வைக்க சுருளிராஜ் முடிவெடுத்ததாக தெரிகிறது.

சுபாஷினி வீட்டில் ஒரு மரணம் ஏற்பட்டால் திருமணம் நின்று விடும் என்பதால் காதலியின் தந்தை சுருளிராஜை கார்த்திக் மற்றும் அவரது நண்பரான சுகுமார் ஆகிய இருவரும் சேர்ந்து 16.10.2013ஆம் தேதி அன்று சைக்கிளில் சென்று கொண்டிருந்த சுருளிராஜை வழிமறித்து கத்தியால் குத்தி கொலை செய்யும் நோக்கில் தாக்கியுள்ளனர்.

இதையும் படிங்க:சேலம் அருகே நின்றிருந்த லாரி மீது ஆம்னி வேன் மோதி விபத்து: 6 பேர் பலி; பதைபதைக்கும் வீடியோ!

இதில், அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த சுருளிராஜ் தேனி நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கின் விசாரணையானது தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்தநிலையில் நேற்று(செவ்வாய்கிழமை) இந்த வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில், நீதிபதி சுரேஷ் தீர்ப்பளித்தார். அதில், "கார்த்திக் மற்றும் அவரது நண்பர் சுகுமார் இருவரும் குற்றவாளிகள் என்றும், இருவருக்கும் தலா ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை, ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அபராதத் தொகையை கட்டத் தவறினால், இருவரும் ஒரு மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்" என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து குற்றவாளிகள் இருவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்க காவல்துறையினர் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர். காதலியின் திருமணத்தை நிறுத்த அவரது தந்தையையே கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற காதலன் மற்றும் அவரது நண்பர் உள்ளிட்ட இரு இளைஞர்களுக்கு ஏழு ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது தேனியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க:முந்திரி தருவதாக கூறி 64.74 லட்சம் ரூபாய் மோசடி; சென்னை விமான நிலையத்தில் ஒருவர் கைது!

ABOUT THE AUTHOR

...view details