தமிழ்நாடு

tamil nadu

"அரசின் பொங்கல் தொகுப்பில் மண் பானை சேர்த்து வழங்க வேண்டும்" - மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 8, 2024, 2:16 PM IST

TN Govt Pongal Gift: : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு சார்பில் வழங்கப்படும் பொங்கல் பரிசு தொகுப்பில் மண் அடுப்பு, மண் பானை சேர்த்து பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என மண்பாண்ட தொழிலாளர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Pottery workers request to give clay pot in pongal gift set
பொங்கல் பரிசு தொகுப்பில் மண் பானை வழங்க மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை

பொங்கல் பரிசு தொகுப்பில் மண் பானை வழங்க மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை

தஞ்சாவூர்: தமிழர்களின் பாரம்பரியம் மற்றும் கலாச்சார விழாவாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. அறுவடைத் திருநாளாகவும், உழவுக்கு உறுதுணையாக இருந்த கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவாகவும், தமிழர்களால் இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், பொங்கல் நெருங்கும் நாட்களில் சமத்துவப் பொங்கல் விழாவாக தமிழகத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளிலும், முன்கூட்டியே பொங்கல் கொண்டாடப்படும்.

இதைத் தொடர்ந்து, பொங்கல் பண்டிகை அன்று வீட்டு வாசல் முன்பு மாக்கோலமிட்டு, புது மண் பானையில் வயல்களில் அறுவடை செய்யப்பட்ட புத்தரிசியில் பொங்கல் வைத்து, வெண் பொங்கல், சர்க்கரைப் பொங்கல், கரும்பு, வாழை உள்ளிட்டவைகளை வைத்து சூரிய பகவானுக்கு படைத்து உற்றார், உறவினர்கள் சூழ குடும்பத்தினர் ஒன்றாக சூரியனை வழிபட்டு மகிழ்ச்சியுடன் பொங்கல் விழா கொண்டாடப்படும்.

ஆனால் தற்போது காலம் மாறிய நவீன யுகத்தில் கேஸ் அடுப்பு, குக்கர், சில்வர் பாத்திரம் போன்றவற்றின் வருகையால், மண் பானையில் பொங்கல் வைப்பதே அரிதாகிப் போய்விட்டது. கிராமப்புறங்களில் மட்டும் இன்றும் பழமை மாறாமல் மண் பானையில் பொங்கல் வைத்துக் கொண்டாடி வருகின்றனர். காலப்போக்கில் அவையும் மாறலாம்.

இந்நிலையில், தஞ்சாவூர் கீழவாசல் குயவர் தெருவில் 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மண்பாண்ட தொழிலில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் தற்போது 20 குடும்பங்கள் மட்டுமே இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த குடும்பங்கள் மட்டுமே, பொங்கல் பானை மற்றும் மண் அடுப்பு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கேஸ் அடுப்பு, குக்கர், சில்வர், பித்தளை, அலுமினிய பாத்திரங்கள் போன்றவற்றின் புதிய வரவால் மண்பானை, மண் அடுப்பில் பொங்கல் வைக்கும் வழக்கம் குறைந்து விட்டதாக, மண்பாண்ட தொழிலாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதுகுறித்து மண் பாண்ட தொழிலாளர் சுப்ரமணியன் கூறுகையில், "பானைகள் செய்து காத்து இருக்கும் எங்களிடம் மக்களாகிய நீங்கள் ஆண்டுக்கு ஒரு முறையாவது மண்பானை, மண் அடுப்பு வாங்கி எங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்றுங்கள்.

தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்பில் மண் பானை, மண் அடுப்பு சேர்த்து வழங்கினால், மண்பாண்ட தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவர்கள் இந்த தொழிலைத் தொடருவார்கள். மண் அடுப்பு மற்றும் மண் பானையில் சமைத்து சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் கூடும். பொதுமக்கள் மண் பானையை வாங்கினால் இந்த அழிந்து வரும் தொழிலை விட்டு விடாமல் தொடர்ந்து செய்வோம்.மேலும் மண் பானை மற்றும் மண் அடுப்புகள் செய்வதற்கு மண் கிடைப்பதில்லை. மண் எடுக்க தடையில்லா சான்றை அரசு வழங்க வேண்டும்" எனக் கூறினார்.

இந்நிலையில், மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் சிறக்க, பொதுமக்கள் மண்பாண்ட பொருட்களை வாங்கி பயன்படுத்தினால் மட்டுமே அவர்கள் வாழ்வில் ஒளியேற்ற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:'2024 நாடாளுமன்ற தேர்தல் சனாதனத்திற்கும் ஜனநாயகத்திற்கும் இடையேயான யுத்தம்' - திருமாவளவன் எம்பி

ABOUT THE AUTHOR

...view details