தஞ்சாவூர்: 2004-ம் ஆண்டு ஜூலை 16ம் தேதி, கும்பகோணம் ஸ்ரீ கிருஷ்ணா பள்ளியில் நடந்த கோர தீ விபத்தில் 94 அப்பாவி குழந்தைகள் தீயில் சிக்கி இரையாகினர். அந்த கொடூரச் சம்பவத்தின் 19ம் ஆண்டு நினைவு நாளான இன்று சம்பவம் நடந்த பள்ளி முன்பு, குழந்தைகளை பறிகொடுத்த பெற்றோர் மற்றும் பலர் மலர்கள் தூவியும் கண்ணீர் மல்க தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
2004ம் ஆண்டு உலகையே உலுக்கிய கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் காசிராமன் தெருவில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா பள்ளியில் பயின்ற 94 சின்னஞ்சிறு குழந்தைகள் தீக்கு இரையாகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 18 குழந்தைகள் படுகாயமடைந்தனர். இதன் 19ம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இதனையொட்டி சம்பவம் நடந்த பள்ளி முன்பு குழந்தைகளை இழந்த பெற்றோர், சமூக ஆர்வலர்கள் எனப் பல தரப்பினர் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து குழந்தைகளை நினைவு கூர்ந்தனர். பின்னர் அவர்களுக்கு பிரியமான பிஸ்கட், இனிப்பு வகைகள், பழங்களை வைத்து கண்ணீர் மல்க அவர்களது திருவுருவப் படத்திற்கு மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினர். ஆண்டுகள் 19 ஆனாலும் இதன் சோகமும் வடுவும் இன்னும் மாறவில்லை.
இதையும் படிங்க: Delhi Fire : டெல்லி அடுக்குமாடி கட்டடத்தில் தீ விபத்து! தலைநகரை தொடரும் சோதனைகள்!