தமிழ்நாடு

tamil nadu

கூடுதல் போதைக்காக சானிடைசர் குடித்து உயிரிழந்த சம்பவம்: மேலும் ஒருவர் பலி.. வெளியான பரபரப்பு பின்னணி!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 23, 2023, 1:42 PM IST

Updated : Sep 23, 2023, 7:32 PM IST

one more person died on drinking Sanitizer: கும்பகோணத்தில் கூடுதல் போதைக்காக, சானிடைசர் கலந்து குடித்து 2 நபர்கள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மேலும் ஒருவர் இறந்ததாகவும் ஒருவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

one more person died on drinking Sanitizer
போதைக்காக சானிடைசர் குடித்த சம்பவத்தில் 3 பேர் பலி

Thanjavur sanitizer Dead

தஞ்சாவூர்:கும்பகோணத்தில் காவேரி ஆற்றின் சக்கரப்படித்துறையில் கடந்த செப். 21ஆம் தேதி இரவு கட்டடத் தொழிலாளிகளான சௌந்தர்ராஜன் (வயது 43) மற்றும் பாலகுரு (வயது 42) ஆகிய இருவரும் மது அருந்திக் கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, இருவரும் கூடுதல் போதை வேண்டி, போதை மாத்திரையுடன் சானிடைசர் என கருதப்படும் கிருமிநாசினி மருந்தை கலந்து குடித்ததாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில், நேற்று (செப்.22) காலை சக்கரப்படித்துறை காவிரி ஆற்றின் கரை அருகே இருவரும் சடலமாக இருப்பதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து, போலீசாருக்கு தகவல் அளித்தனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கும்பகோணம் கிழக்கு காவல் நிலைய போலீசார், இருவரின் உடலைகளையும் கைப்பற்றி உடற்கூராய்விற்காக கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அப்போது அப்பகுதியில் இருந்தவர்கள், இவர்களுடன் மேலும் சிலர் அங்கு மது குடித்ததாக தகவல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து அவர்கள் யார் என போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தடய அறிவியல் நிபுணர் குழு ஆதாரங்களை சேகரித்து ஆய்வு மேற்கொண்டு வந்தனர்.

இதற்கிடையே, கடந்த 21ஆம் தேதி கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு, ஒருவர் சடலமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில், வழக்கு பதிவு செய்து அவர் யார்? எந்த ஊர் என விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் இறந்த நபர் யார் என்பது தெரியாத காரணத்தால், உடலை அடையாளம் தெரியாத நபர் என கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை சவக்கிடங்களில் வைத்து இருந்தனர்.

அதனைத் தொடர்ந்து, நேற்று (செப்.22) மாலை சானிடைசர் குடித்த 4-வது நபரான துக்காம்பாளையத் தெருவை சேர்ந்த கூலி தொழிலாளி ஜெயகிருஷ்ணா (வயது 30), சானிடைசரில் தண்ணீர் கலந்து குடித்ததால் உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறி, கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இது குறித்து ஜெயகிருஷ்ணா கூறுகையில், "நாங்கள் 4 பேரும் தான் கடந்த 20ஆம் தேதி காலை சானிடைசரில் தண்ணீர் கலந்து குடித்தோம். சானிடைசரை காந்தி பூங்காவில் சடலமாக கிடந்த குப்பை சேகரிக்கும் பணி செய்து வந்த முருகன் தான் கொண்டு வந்தார். எனக்கு சிறிதளவு குடித்தது தொண்டையில் ஏதோபோல ஆகியது, அதனால் எனக்கு பிடிக்கவில்லை எனக் கூறிவிட்டு, நான் அங்கிருந்து கிளம்பி விட்டேன். ஆனால் எஞ்சிய மூவரும் குடித்து உள்ளனர். மேலும், 21 ஆம் தேதியும் சானிடைசரில் தண்ணீர் கலந்து குடித்ததுள்ளனர்" என்று தெரிவித்தார்.

போலீசாரின் விசாரணையில், கடந்த 20 ஆம் தேதி காந்தி பூங்கா முன்பு சடலமாக கிடந்தவர் இவர்களுடன் சானிடைசர் கலந்து குடித்த முருகன் என்பதும், அவரும் சானிடைசரில் மதுவை கலந்து குடித்து தான் உயிரிழந்துள்ளார் என்பதும் உறுதியானதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் சானிடைசர் உயிரிழப்பு எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது.

தற்போது சிறிதளவு மட்டும் சானிடைசர் குடித்த ஜெயகிருஷ்ணா கும்பகோணம் அரசு மாவட்ட தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது ஜெயகிருஷ்ணா நலமுடன் உள்ளதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: போதைக்காக மாத்திரையுடன் சானிடைசர் கலந்து குடித்த கொடூரம்.. இரு மதுப்பிரியர்கள் பரிதாப பலி!

Last Updated : Sep 23, 2023, 7:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details