தமிழ்நாடு

tamil nadu

செங்கலுக்கு புகழ் பெற்றவர் உதயநிதி - அமைச்சர் அன்பில் மகேஷ்

By

Published : Jun 20, 2023, 8:16 AM IST

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், புற்றுநோயினைக் கண்டறியும் அதிநவீன ஸ்கேன் வசதி மற்றும் புற்றுநோய் சிகிச்சை மையம் கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

செங்கலுக்கு புகழ் பெற்றவர் உதயநிதி - அமைச்சர் அன்பில் மகேஷ்
செங்கலுக்கு புகழ் பெற்றவர் உதயநிதி - அமைச்சர் அன்பில் மகேஷ்

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், புற்றுநோயினைக் கண்டறியும் அதிநவீன ஸ்கேன் வசதி மற்றும் புற்றுநோய் சிகிச்சை மையம் கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் அமைச்சர்கள் பேச்சு

தஞ்சாவூர்:தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் 42 கோடி ரூபாய் மதிப்பில் புற்றுநோய் சிகிச்சை மைய கட்டடத்தின் அடிக்கல் நாட்டு விழா, 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புற்றுநோயினைக் கண்டறியும் அதிநவீன பாசிட்ரான் எமிசன் டோமோகிராபி ஸ்கேன் (PET CT SCAN) தொடக்கம் மற்றும் 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பூதலூர் அரசு மருத்துவமனையில் யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பிரிவுக்கான புதிய கட்டடம் ஆகியவற்றை திறந்து வைக்கும் நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைத்தனர்.

இதனையடுத்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “புற்றுநோயை துல்லியமாக கண்டறிய வேண்டும் என்று தனியார் மருத்துவமனைக்குச் சென்றால் 25 ஆயிரம் ரூபாய் செலவாகும். ஆனால், தஞ்சாவூர் மருத்துவமனைக்கு வந்தால் முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் இலவசமாக கிடைக்கும். மற்ற நோயாளிகளுக்கு 11 ஆயிரம் ரூபாய்க்கு கிடைக்கும். இதன் மூலம் தஞ்சாவூர், நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் உள்ளிட்ட 8 மாவட்ட மக்கள் பயன் பெறலாம்” என்றார்.

இதன் பின்னர் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், “ஒட்டுமொத்த டெல்டா மாவட்டங்களில் இல்லாத அளவிற்கு இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அடிக்கல் நாட்டு விழாவின்போது, செங்கல் கல்லை எடுத்து வைப்போம். ஆனால், இங்கு உள்ள அமைச்சர் செங்கல் கல்லிற்கு பிரசித்திபெற்றவர். அவருடைய ஸ்டைல், அடிக்கல் நாட்டிற்கு செங்கல் கல்லையும் வைப்பார். நமக்கு எதிர்ப்பு என்று வந்தால் டெல்லியை நோக்கி செங்கல் கல்லை உயர்த்தி காட்டக் கூடிய அமைச்சர்” எனத் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “சுகாதாரமும், விளையாட்டும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்பு உடையது. மேலும் சுகாதாரமும், விளையாட்டும் எவ்வளவு முக்கியமோ, அதேபோல் கல்வி மிக மிக முக்கியம். கல்வி மற்றும் சுகாதாரம் ஆகிய இரண்டு துறைகளிலும் இந்தியாவிலேயே தமிழ்நாடு தன்னிகரற்ற சிறப்பான மாநிலமாக விளங்கி வருகிறது.

பல வட மாநிலங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சிரமப்பட்டு கொண்டிருக்கும் நிலையில், நம்முடைய மாநிலம் பல உயர் சிறப்பு மருத்துவமனைகளை உருவாக்கி உள்ளது. மருத்துவ சிகிச்சை எல்லோருக்கும் சென்றடைய வேண்டும் என்று மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டம் தொடங்கப்பட்டது.

அதில் இதுவரை ஒரு கோடியே 60 ஆயிரம் பேர் பயன் அடைந்துள்ளனர். மேலும், இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48 என்ற திட்டத்தின் கீழ் இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் பயன் அடைந்துள்ளனர்” எனத் தெரிவித்தார். இந்த நிகழ்வில் எம்.பி. பழநிமாணிக்கம், மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப், எம்எல்ஏக்கள் சந்திரசேகரன், நீலமேகம், மாநகராட்சி மேயர் ராமநாதன் மற்றும் துணை மேயர் அஞ்சுகம் பூபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:அதிமுக ஆட்சியில் தூங்கிக்கொண்டிருந்த மருத்துவத்துறையை தட்டி எழுப்பியுள்ளோம்: அமைச்சர் மா.சுப்ரமணியன்

ABOUT THE AUTHOR

...view details