தமிழ்நாடு

tamil nadu

தென்காசி குற்றாலநாதர் ஆலயத்தில் பக்தர்களுக்கு தரமற்ற உணவு விநியோகமா? டன் கணக்கிலான உணவுப் பொருட்கள் பறிமுதல்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 22, 2023, 12:27 PM IST

Updated : Aug 22, 2023, 12:37 PM IST

தென்காசி குற்றாலநாதர் ஆலயத்தில் ஆண்டவனுக்கு படைக்கப்படும் பிரசாதம் முதல் பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாதம் வரை அனைத்தும் தரமற்ற பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படுவதாக எழுந்த புகாரில் சோதனையிட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் டன் கணக்கிலான உணவுப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

குற்றாலம் கோயிலில் வழங்கப்படும் தரமற்ற உணவு
குற்றாலம் கோயிலில் வழங்கப்படும் தரமற்ற உணவு

Tenkasi Kutralantathar temple prashadam issue

தென்காசி:குற்றாலத்தில் புகழ்பெற்ற அருள்மிகு குற்றாலநாதர் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து குற்றால அருவிக்கு நீராட வரும் சுற்றுலாப் பயணிகள், குற்றால நாதரை தரிசிக்காமல் செல்வதில்லை. இதேபோன்று சபரிமலைக்கு மாலை அணிவித்து சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களும் குற்றாலம் பேரருவியில் வந்து குளித்துவிட்டு, குற்றாலநாதரை தரிசித்து விட்டு செல்வது வழக்கமாக ஒன்றாக இருந்து வருகிறது.

மேலும் தென்காசி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் குற்றாலநாதர் ஆலயத்திற்கு திருவிழா காலங்களில் வந்து செல்வதும், சாதாரண நாட்களில் வந்து செல்வதும் வாடிக்கையான ஒன்று. இத்தகைய பல்வேறு சிறப்புகளை பெற்ற குற்றாலநாதர் ஆலயத்தில் இறைவனுக்கு படைக்கப்படும் உணவும், பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாதமும் தரமற்றதாக இருப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தன.

இந்த நிலையில் நேற்று (ஆகஸ்ட் 21) தென்காசி வட்டார உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் நாக சுப்பிரமணியன், குற்றாலநாதர் ஆலயத்தின் உணவு மற்றும் பிரசாதம் தயாரிக்கும் அறையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது அங்கு கோயில் நிர்வாகத்தில் பயன்படுத்தப்பட்டு வந்த சுமார் 850 கிலோ வண்டுகள் மொய்த்த பச்சரிசி, 48 லிட்டர் தரமற்ற எண்ணெய் மற்றும் 15 கிலோ பச்சரிசி மாவு, இரண்டரை கிலோ பழைய வெல்லம் உள்ளிட்ட பல்வேறு தரமற்ற உணவு பொருட்களை வட்டார உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் பறிமுதல் செய்தார்.

தரமற்ற நிலையில் இருந்த அனைத்து பொருட்களையும் பறிமுதல் செய்த அவர், இது குறித்து சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தார். மேலும் இது குறித்து மேல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்துள்ளார். இந்த சம்பவம் பக்தர்கள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் குற்றாலம் பகுதிகளில் இருந்தும், பல்வேறு மாவட்டங்கள் மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்தும் ஆலயத்திற்கு பக்தர்கள் வருகை அதிகரித்து உள்ள நிலையில் இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல் இருக்க முறையான உணவு வழங்க வேண்டும் எனவும், வழங்கப்படும் உணவு பொருட்கள் தரம் உள்ளதாக இருக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்களும், பக்தர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:"யோகிகள், சந்நியாசிகள் காலில் விழுவது எனது பழக்கம்.. அரசியல் பேச விரும்பவில்லை" - நடிகர் ரஜினிகாந்த்!

Last Updated : Aug 22, 2023, 12:37 PM IST

ABOUT THE AUTHOR

...view details