ETV Bharat / entertainment

"யோகிகள், சந்நியாசிகள் காலில் விழுவது எனது பழக்கம்.. அரசியல் பேச விரும்பவில்லை" - நடிகர் ரஜினிகாந்த்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 22, 2023, 7:25 AM IST

Rajinikanth touch yogi feet: யோகி ஆதித்யநாத் காலில் நடிகர் ரஜினிகாந்த் விழுந்தது சர்ச்சையான நிலையில், யோகிகள், சந்நியாசிகள் வயதில் சிறியவர்களாக இருந்தாலும் அவர்கள் காலில் விழுவது தனது பழக்கம் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்து உள்ளார்.

Rajinikanth returned to Chennai from the Himalayas said that it is my habit to fall the feet of yogi and Sanyasi
நடிகர் ரஜினிகாந்த்

Rajinikanth open about Uttar Pradesh CM Feet Touch issue

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்துள்ள ஜெயிலர் படம் வெளியாவதற்கு முன்பாக, நான்கு வருடங்களுக்குப் பிறகு அவர் இமயமலைக்கு ஆன்மிக பயணத்திற்கு சென்றார். நடிகர் ரஜினிகாந்த் 2010 வரை அவரது படங்கள் வெளியாவதற்கு முன்பாக இமயமலைக்கு செல்வதை வழக்கமாக வைத்து இருந்தார். கடந்த 4 ஆண்டுகளாக கரோனா, உடல்நலக்குறைவு உள்ளிட்ட காரணங்களுக்காக இமயமலைக்கு பயணம் செல்வதை தவிர்த்து வந்தார்.

கடைசியாக 2018ஆம் ஆண்டு காலா படம் வெளியாவதற்கு முன்பாக இமயமலைக்கு சென்று இருந்தார். பின்னர் கரோனா காரணத்தால் 4 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது இமயமலைக்கு சென்றுள்ளார். ஜெயிலர் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று பாக்ஸ் ஆபிசிலும் நல்ல வசூலைப் பெற்ற நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இமயமலையில் இருந்து திரும்பி தமிழகம் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அவர், பத்ரிநாத், ஜார்கண்ட், உத்தர பிரதேசம் என தொடர்ந்து பயணம் மேற்கொண்டார். இதற்கிடையில் ரஜினிகாந்த் இல்லாமலேயே ஜெயிலர் படத்தின் வெற்றி விழாவை படக்குழுவினர் கொண்டாடினர். ஜார்கண்ட் பயணத்தின் போது அங்குள்ள சின்னமாஸ்தா கோயிலில் வழிபாடு செய்த ரஜினிகாந்த், தொடர்ந்து யசோதா ஆசிரமம் சென்று அங்கு தியானத்தில் ஈடுபட்டார். பின்னர் ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து பேசினார்.

பின்னர் ரஜினிகாந்த் உத்தர பிரதேசம் சென்று யோகி ஆதித்யநாத் உடன் ஜெயிலர் படம் பார்க்க உள்ளதாக தகவல் வெளியானது. இதனையடுத்து லக்னோ சென்ற ரஜினிகாந்த் உத்தர பிரதேச துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மௌரியா உடன் ஜெயிலர் படம் பார்த்தார். பின்னர் யோகி ஆதித்யநாத் இல்லத்திற்கு மனைவி லதா உடன் சென்ற ரஜினிகாந்த், தன்னைவிட 21 வயது குறைந்தவரான யோகி ஆதித்யநாத் காலில் விழுந்து வணங்கினார்.

ரஜினிகாந்த்தின் இந்த செயல் சமூக வலைதளங்களிலும், அவரது ரசிகர்கள் மத்தியிலும் விவாதத்தை கிளப்பியது. இந்நிலையில் தன்னுடைய ஆன்மிக பயணத்தை முடித்து விட்டு நடிகர் ரஜினிகாந்த் சென்னை திரும்பினார். அப்போது அவரை சென்னை விமான நிலையத்தில் நூற்றுக்கு மேற்பட்ட ரசிகர்கள் திரண்டு ஆரவாரத்துடன் வரவேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், "நான்கு வருடங்களுக்கு பிறகு சென்று வந்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. ஜெயிலர் திரைப்படத்தை மாபெரும் வெற்றி படமாக மாற்றிய என்னை வாழவைக்கும் தெய்வங்களான தமிழக மக்களுக்கும், உலக மக்கள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை ஒரு நல்ல படத்தை உருவாக்குங்கள் என உறுதுணையாக இருந்த தயாரிப்பாளர் கலாநிதி மாறன், அனைத்து காட்சிகளையும் ரசித்து ரசித்து எடுத்த இயக்குனர் நெல்சன், பின்னணி இசையின் மூலம் படத்தை மாபெரும் வெற்றிக்கு கொண்டு சென்ற அனிருத், தொழில்நுட்ப கலைஞர்கள், உடன் நடித்த நடிகர்களுக்கு பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்த விவகாரம் சர்ச்சை ஆகியது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, "யோகிகள், சந்நியாசி ஆனவர்கள் வயதில் சிறியவர்களாக இருந்தாலும் கூட அவர்களின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவது என்னுடைய பழக்கம்" என்றார்.

சந்திராயன் 3 நிலவில் இறங்குவது குறித்து கேட்டதற்கு, "அதைப் பற்றி எனக்கு தெரியவில்லை என பதில் அளித்த அவர் தொடர்ந்து பேசுகையில், அரசியலைப் பற்றி நான் பேச விரும்பலை" எனக் கூறினார்.

இதையும் படிங்க: யோகி ஆதித்யநாத் காலில் விழுந்து வணங்கிய ரஜினிகாந்த்.. சமூகவலைதளங்களில் ரசிகர்கள் விமர்சனம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.