தமிழ்நாடு

tamil nadu

Courtallam fire accident: குற்றாலம் தீ விபத்திற்கான காரணம் இதுதான் - புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 26, 2023, 5:09 PM IST

சட்ட விதிமுறைகள் மீறப்பட்டதன் விளைவாக தான் குற்றாலம் தீ விபத்து நிகழ்ந்துள்ளதாகவும், இந்த தீ விபத்திற்கு காரணமான குற்றவாளி குற்றாலநாதர் கோயில் உதவி ஆணையர் தான் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்து உள்ளார்.

Courtallam fire accident
புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி பேட்டி

புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி

தென்காசி:குற்றாலம் மெயின் அருவி அருகே உள்ள, குற்றாலநாதர் சுவாமி திருக்கோயில் சுற்றுப் பிரகாரத்தில் உள்ள 40க்கும் மேற்பட்ட கடைகள் நேற்று (ஆகஸ்ட் 25) தீ விபத்தில் சிக்கி முழுவதுமாக எரிந்து நாசமாகிய நிலையில், இந்த தீ விபத்தில் கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், தற்போது தீயானது முற்றிலும் அணைக்கப்பட்டுள்ள சூழலில், தீ விபத்து நடைபெற்ற இடத்தை புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி நேரில் பார்வையிட்டார். தொடர்ந்து, தீ விபத்தில் சேதம் அடைந்த கடையின் உரிமையாளர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்த அவர், அவர்கள் அடைந்துள்ள நஷ்டம் குறித்து விசாரித்து தெரிந்து கொண்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியின் போது, “தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றாக விளங்கக்கூடிய குற்றாலம் மெயின் அருவி அருகே உள்ள குற்றாலநாதர் சுவாமி திருக்கோயில் சுற்றுப்புற மதில் சுவர் அருகே கடைகள் அமைக்க அனுமதி கொடுத்தது தவறு எனவும், பல்வேறு சட்ட விதிமுறைகளை மீறி இது போன்ற அனுமதியை கோயில் நிர்வாகம் கொடுத்ததால் தான் இது போன்ற விபத்துக்கள் ஏற்பட்டுள்ளது.

சில வருடங்களுக்கு முன்பும் இதே போல விபத்து நடந்துள்ளது , அதை கண்டுகொள்ளாமல் விதிகளை மீறி கடைகளை அமைத்துள்ளனர். வரலாற்று சிறப்பு மிக்க கோயிலின் சுவர்களே இடிந்து விழும் சூழலில் இருக்கிறது. குற்றால சீசன் என்பதால் பலர் வந்து செல்கின்றனர். நல்லபடியாக நேற்று எந்த வித உயிர்ச்சேதமும் நடக்கவில்லை.

இதையும் படிங்க:Madurai train fire: மதுரையில் சுற்றுலா ரயிலில் தீ விபத்து - பலியான 6 பேர் விவரங்கள்!

தீயணைப்பு வாகனம் வருவதற்கு கூட இங்கு பாதை இல்லை. கோயில் நிர்வாகத்தின் அலட்சியதால் கோயிலின் நிலைமை மோசமாக உள்ளது”. ஆகவே, இந்த தீ விபத்துக்கான முழுப்பொறுப்பும் கோயில் நிர்வாகமும், அதில் முதல் குற்றவாளி கோயில் உதவி ஆணையராக உள்ள கண்ணதாசன் தான் என கூறினார்.

தொடர்ந்து, சட்ட விரோதமாக கடைகள் அமைக்க அனுமதி வழங்கிய உதவி ஆணையாளர் கண்ணதாசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், நஷ்டம் அடைந்த வியாபாரிகளுக்கு கருணை அடிப்படையில் தமிழக அரசு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

மேலும், அந்த இழப்பீடு தொகையை குற்றாலநாதர் சுவாமி கோயில் உதவி ஆணையாளராக உள்ள கண்ணதாசன் என்பவரிடமிருந்து பெற்று நஷ்டம் அடைந்த வியாபாரிகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் பேசினார்.

இதையும் படிங்க:Madurai train fire: மதுரையில் சுற்றுலா ரயிலில் நிகழ்ந்த தீ விபத்தில் 9 பேர் பலி: விபத்துக்கான காரணம் என்ன?

ABOUT THE AUTHOR

...view details