தமிழ்நாடு

tamil nadu

மணல் கடத்தலில் ஈடுபடும் கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஏரியில் இறங்கி மக்கள் போராட்டம்!!

By

Published : Jun 1, 2023, 7:57 PM IST

ஏரியில் இருந்து மணல் கடத்தலில் ஈடுபடும் கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் ஏரியில் இறங்கி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு நிலவியது.

Etv Bharat
Etv Bharat

மணல் கடத்தலில் ஈடுபடும் கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஏரியில் இறங்கி மக்கள் போராட்டம்!!

சேலம்: மல்லூர் அடுத்த வேங்கம்பட்டி அருகே உள்ளது ஓட்டேரி. சுமார் 60 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரிக்கு பருவ மழைக் காலங்களில் பனமரத்துப்பட்டி ஏரி, பெரிய ஏரி, பெத்தாம்பட்டி ஏரி ஆகிய பகுதிகளில் இருந்து மழை நீர் வந்து சேரும். இந்த நீர் வளத்தை வைத்து இந்த பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் விவசாயம் செய்து பயன் அடைந்து வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது ஏரியில் நீர் வற்றியுள்ளதால் அந்த பகுதி முழுவதும் மணல் நிறைந்த பகுதிகளாக உள்ளது. இந்த நிலையில், மல்லூர் பேரூராட்சி இரண்டாவது வார்டு கவுன்சிலராக உள்ள கோமதி பழனிவேல் மற்றும் அவரது அடியாட்கள், சட்ட விரோதமாக மணல் மற்றும் நொரம்பு மண்ணை எடுத்து விற்பனை செய்து வருவதாக புகார் எழுந்துள்ளது.

இந்த மண் மற்றும் மணல் கடத்தலுக்கு, கிராம மக்கள் பலமுறை எதிர்ப்பு தெரிவித்தும் மணல் கடத்தல் நிறுத்தப்படவில்லை. இந்நிலையில் நாள்தோறும் இரவு நேரங்களில் மணல் கடத்தல் நடந்து வருகிறது. இதுவரை 400 லோடுகளுக்கு மேல் மணல் அள்ளப்பட்டதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஆட்சியர் அலுவலகம் மற்றும் காவல் துறையில் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்கள் மணல் அள்ளப்படும் ஏரியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்திட வேண்டும் எனவும், ஏரியை பாதுகாத்திட வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து அந்த கிராமத்தை சேர்ந்த கந்தசாமி கூறுகையில், ”கோயில் திருவிழாவிற்கு என்று கூறி மல்லூர் பேரூராட்சி பகுதியில் இரண்டாவது வார்டு கவுன்சிலர் ஆக உள்ள கோமதி பழனிவேல், தனது அதிகாரத்தை பயன்படுத்தி மணலை அள்ளி கோடிக்கணக்கான ரூபாய்க்கு விற்பனை செய்து வருகின்றார். உடனடியாக அரசு இந்த மணல் கடத்தலை தடுத்து மணல் கடத்தலில் ஈடுபட்ட கவுன்சிலரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்" என்று கூறினர்.

இதையும் படிங்க: Salem ARRS: வரதட்சணை கொடுமை: தர்ணாவில் ஈடுபட்ட சேலம் ஏ.ஆர்.ஆர்.எஸ் உரிமையாளரின் மருமகள்!

ABOUT THE AUTHOR

...view details