தமிழ்நாடு

tamil nadu

'பண மோசடி வழக்கில் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்கவேண்டும்' - முத்தரசன்

By

Published : Nov 28, 2021, 3:16 PM IST

பண மோசடி வழக்கில் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்கவேண்டும்
பண மோசடி வழக்கில் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்கவேண்டும்

அரசு வேலை வாங்கி தருவதாகப் பலரிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் முன்னாள் உதவியாளர் மணி இன்று காலை தனிப்படை காவலர்களால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சேலம்: பண மோசடி புகாரில் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
முன்னாள் முதலமைச்சரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமியின் முன்னாள் உதவியாளராக இருந்தவர் மணி. இவர் தனக்கு இருந்த அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி அரசு வேலை வாங்கித் தருவதாகப் பலரிடம் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்தது.

குறிப்பாகக் கடலூர் மாவட்டம் நெய்வேலியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவரிடம் மின்வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாக ரூ.17 லட்சம் பணம் பெற்றதாகவும். ஆனால் வேலை வாங்கித் தராமலும் பணத்தையும் திருப்பி கொடுக்காமலும் மோசடியில் ஈடுபட்டதாகத் தமிழ்ச்செல்வன் சேலம் மாவட்ட குற்றப்பிரிவில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு புகார் அளித்திருந்தார்.

எடப்பாடி பழனிசாமியின் தனி உதவியாளர் கைது
சிக்கிய எடப்பாடி பழனிசாமியின் உதவியாளர்

இந்தப் புகாரின் அடிப்படையில் சேலம் மாவட்ட குற்றப்பிரிவு காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். துணை கண்காணிப்பாளர் இளமுருகன், தலைமையில் தனிப்படை அமைத்து மணியை போலீசார் தேடி வந்தனர்.

இதனிடையே மோசடி புகாரில் சிக்கிய மணி தலைமறைவாகி முன்பிணை பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார். அவரது முன்பிணை மனு தள்ளுபடி ஆன நிலையில் தனிப்படை காவலர்கள் மணியை தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்த நிலையில் இன்று காலை மணியை அவரது சொந்த ஊரான ஓமலூர் பகுதியில் சேலம் மாவட்ட குற்றப்பிரிவு தனிப்படை காவலர்கள் கைது செய்தனர்.
எடப்பாடி பழனிசாமியின் முன்னாள் உதவியாளர் மணியுடன் தொடர்பிலிருந்தவர்கள் குறித்தும் வேறு ஏதேனும் மோசடியில் ஈடுபட்டாரா என்பது குறித்தும் சேலம் மாவட்ட குற்றப்பிரிவு காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எடப்பாடி கே. பழனிசாமி

எடப்பாடிக்கு தெரியாமல் இந்த மோசடி நடந்திருக்காது

இந்தநிலையில் சேலத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் முத்தரசன், "அரசு வேலை வாங்கித் தருவதாக நடந்த பண மோசடி விவகாரத்தில் அப்போதைய முதலமைச்சருக்குத் தெரியாமல் இந்த மோசடி நடந்திருக்காது. எனவே இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன்
மேலும், மத்தியக் குழுவின் ஆய்வுக்குப் பின்னரும் தமிழ்நாட்டில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பல்வேறு சேதங்கள் ஏற்பட்டுள்ளன. எனவே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய நிவாரணம் கிடைக்க மீண்டும் ஆய்வு நடத்த வேண்டும்" எனக் கேட்டுக் கொண்டார்.

இதையும் படிங்க: அன்புமணியை முதலமைச்சராக்க புறப்பட்ட ராமதாஸ்: தடுத்தது மழை... ரத்தானது கூட்டம்!

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details