தமிழ்நாடு

tamil nadu

கர்ப்பிணி மகளை ஆணவக்கொலை செய்ய தந்தை திட்டமா? - சேலத்தில் நடந்தது என்ன?

By

Published : Mar 16, 2023, 7:50 PM IST

சேலம் அருகே மாற்று சாதி காதலனை திருமணம் செய்து கொண்ட தனது மகளை, அடியாட்களுடன் வந்து கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்ப்பிணி மகளை ஆணவக்கொலை செய்ய தந்தை திட்டமா? - சேலத்தில் நடந்தது என்ன?
கர்ப்பிணி மகளை ஆணவக்கொலை செய்ய தந்தை திட்டமா? - சேலத்தில் நடந்தது என்ன?

பாதிக்கப்பட்ட மேஷா அளித்த பேட்டி

சேலம்: தாரமங்கலம் அருகே உள்ள போத்தனூரில் சேட்டு என்பவர் இன்சூரன்ஸ் ஏஜென்ட்டாக பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் மேஷா. இவர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு, அதே ஊரைச் சேர்ந்த மூர்த்தி என்பவரை காதலித்து வந்துள்ளார். இதற்கு மேஷாவின் தந்தையான சேட்டு கடும் எதிப்பு தெரிவித்துள்ளார். அதேநேரம் மூர்த்தியின் பெற்றோர், காதலுக்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து தனது பெற்றோரின் எதிர்ப்பை மீறி, மூர்த்தியை மேஷா காதல் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

பின்னர் திருமணம் முடிந்த கையோடு ஓமலூர் மகளிர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு மேஷாவும், மூர்த்தியும் தஞ்சம் அடைந்துள்ளனர். இதனையடுத்து மகளிர் காவல் நிலையத்தில் மேஷாவின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களிடம் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். இந்த பேச்சுவார்த்தையில் மேஷாவின் பெற்றோர், ‘இந்த திருமணத்தை ஏற்றுக் கொள்ள மாட்டோம். எங்கள் உறவு முறிந்தது.

வேறு சாதி ஆணைத் திருமணம் செய்து கொண்ட மேஷா உடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை. நாங்கள் எந்த விதமான பிரச்னைகளையும் அவர்களுக்கு செய்ய மாட்டோம்' என்று எழுதிக் கொடுத்து விட்டு வெளியேறி உள்ளனர். இதனைத் தொடர்ந்து தற்போது மேஷா, நான்கு மாத கர்ப்பிணியாக அவரது கணவரான மூர்த்தி வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று (மார்ச் 15) இரவு மேஷாவின் தந்தை சேட்டு, மாருதி வேனில் அடியாட்களுடன் மேஷாவின் வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது கர்ப்பிணியான தனது மகளின் வயிற்றில் விறகு கட்டையால் அடித்துள்ளார். இந்த திடீர் தாக்குதலால் அதிர்ச்சி அடைந்த மேஷா, உடனடியாக வீட்டிற்குள் ஓடி கதவை தாழிட்டுக் கொண்டுள்ளார். இருப்பினும் கடப்பாரை கம்பியால் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்ற கும்பல், வீட்டில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கி உள்ளனர். இதனிடையே சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் திரண்டு வந்ததால், அவர்கள் மாருதி வேனில் ஏறி தப்பிச் சென்றுள்ளனர்.

மேலும் இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தாரமங்கலம் காவல் துறையினர், அங்கு வலியால் துடித்துக் கொண்டிருந்த மேஷாவை ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அங்கே அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இருப்பினும், மேஷா ஆபத்தான நிலையில் இருந்ததால், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் இச்சம்பவம் தொடர்பாக மேஷா கூறுகையில், “என் அப்பா சேட்டு அடியாட்களுடன் திடீரென்று வீட்டிற்கு வந்தார். அப்போது அவர், கையில் வைத்திருந்த விறகு கட்டையால் எனது வயிற்றில் அடித்தார். அவரோடு வந்தவர்களிடம் கத்தி, வீச்சரிவாள் போன்ற ஆயுதங்கள் இருந்தது. நான் உடனே வலியை தாங்கிக் கொண்டு, வீட்டிற்குள் ஓடி கதவை தாழிட்டுக் கொண்டேன். அப்போதும் கதவை கடப்பாரையால் உடைத்துக் கொண்டு உள்ளே வந்த அவர்கள், வீட்டிற்குள் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கினார்கள்.

அப்போது வீட்டில் இருந்த எனது அத்தை, மாமா மற்றும் எனது கணவருடைய அண்ணனின் 3 வயது குழந்தையையும் அவர்கள் தாக்கினார்கள். பின்னர் சத்தம் கேட்டு அங்கே வந்த ஊர் மக்களின் கூட்டம் அதிகமானதால், அவர்கள் அங்கிருந்து தப்பித்துச் சென்று விட்டார்கள். எனது அப்பாவின் நோக்கம் என்னைக் கொலை செய்ய வேண்டும் என்பதுதான். திருமணத்திற்கு பிறகு, நான் குழந்தைக்கு தாயான தகவல் அவருக்கு கிடைத்த உடன், என் மீது அவருக்கு ஆத்திரம் அதிகமாகி விட்டது.

எனக்கும், எனது குடும்பத்துக்கும் காவல் துறை உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும். என் மீது தாக்குதல் நடத்திய எனது தந்தை மற்றும் அவரிடம் வந்த அடியாட்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறினார். மேலும் இச்சம்பவம் குறித்து ஓமலூர் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேநேரம் மேஷா மீது வீடு புகுந்து தாக்குதல் நடத்திய தந்தை சேட்டு மற்றும் அடியாட்களை காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:கருவேப்பிலைக்குள் மறைத்து ஐம்பொன் சிலை கடத்தல்.. வேலூரில் இருவர் சிக்கியது எப்படி?

ABOUT THE AUTHOR

...view details