தமிழ்நாடு

tamil nadu

கோடநாடு வழக்கு; கார் ஓட்டுநர் கனகராஜ் சகோதரர் தனபால் மருத்துவமனையில் அனுமதி!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 16, 2023, 4:15 PM IST

Driver Kanagaraj's brother Dhanapal: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபால் திடீர் நெஞ்சுவலி காரணமாக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

கார் ஓட்டுநர் கனகராஜ் சகோதரர் தனபால் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதி
கார் ஓட்டுநர் கனகராஜ் சகோதரர் தனபால் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதி

சேலம்: மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட் பங்களாவில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி ஆவணங்கள் மற்றும் பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டன. இதனைத் தடுக்க வந்த காவலாளிகள் பலர் கொலை செய்யப்பட்டனர்.

தொடர்ந்து கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் கார் ஓட்டுநர் கனகராஜ், விசாரணை வலையத்துக்குள் வருவதற்கு முன்பே மர்மமான முறையில் சாலை விபத்தில் உயிரிழந்தார். இந்த வழக்கு உதகை மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது கோவை சிபிசிஐடி கூடுதல் துணை ஆணையர் முருகவேல் தலைமையிலான காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கோடநாடு வழக்கின் முக்கிய தடயங்களை அழித்ததாக கனகராஜின் சகோதரர் தனபால், அவரது உறவினர் ரமேஷ் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த சில தினங்களாக சேலத்தில் பல்வேறு இடங்களில் செய்தியாளர்களைச் சந்தித்த கனகராஜின் சகோதரர் தனபால், பல்வேறு திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டார்.

இதையும் படிங்க:மகளிர் உரிமைத் தொகை குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் பேசிய வீடியோ... பல்வேறு மொழிகளில் வெளியீடு!

அதில் அவர், கனகராஜ் தன்னிடம் ஐந்து பைகள் கொடுத்ததாகவும், அவரிடம் 2 ஆயிரம் கோடி ரூபாய் பணம் தர எடப்பாடி பழனிசாமி பேரம் பேசியதாகவும் தெரிவித்து இருந்தார். தொடர்ந்து விசாரணைக்காக சிபிசிஐடி அலுவலகத்தில் கடந்த 14ஆம் தேதி ஆஜராகி, பல்வேறு தகவல்களை தெரிவித்து வந்தார்.

அதையடுத்து அவர், விசாரணைக்குப் பின் மனதில் இருந்த பாரம் பாதி குறைந்துள்ளதாகவும், சிபிசிஐடி விசாரணை தனக்கு நிறைவாக இருந்ததாகவும், விசாரணையில் வாக்குமூலம் எழுத்துப்பூர்வமாகவும், வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் சேலம், நாமக்கல், திருப்பூர், கோவை மற்றும் நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த சம்பந்தப்பட்ட 50க்கும் மேற்பட்டவர்களின் பெயர்களைச் சொல்லியுள்ளதாவும் கூறினார். தொடர்ந்து அவர் இன்னும் நிறைய சொல்ல வேண்டி உள்ளதால், 26ஆம் தேதியும் தன்னை ஆஜாராக அழைத்துள்ளதாக தெரிவித்தார்.

இந்த நிலையில், எடப்பாடியில் தங்கியிருக்கும் தனபால், இன்று காலை (செப்.16) திடீரென மயக்கம் அடைந்துள்ளார். அதைத் தொடர்ந்து, உடனே எடப்பாடியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு தனபால் சென்ற நிலையில் அங்கு அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.

அதையடுத்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் தனபால் தற்போது அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். தொடர்ந்து அவரை மருத்துவர்கள் கண்காணித்து அவருக்கு உரிய சிகிச்சை அளித்து வருவதாக கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:"சனாதனம் இந்துக்களின் நித்தியக் கடமை.. கருத்து சுதந்திரத்தை கொண்டு காயப்படுத்தாதீர்கள்" - சென்னை உயர்நீதிமன்றம்!

ABOUT THE AUTHOR

...view details