தமிழ்நாடு

tamil nadu

பார்வை மாற்றுத்திறனாளிகளின் வேதனைக்குரலாக ஒலிக்கும் சக மனிதன்!

By

Published : Oct 26, 2020, 8:38 PM IST

சேலம்: கரோனா பொதுமுடக்கத்தால் ரத்து செய்யப்பட்ட சென்னை புறநகர் மின்சார ரயில் சேவையை மீண்டும் தொடங்கினால் ஆயிரக்கணக்கான பார்வை மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கைச் சீராகும் எனச் சந்திரசேகர் கோரிக்கை விடுத்துள்ளார்.

chandrasekar
chandrasekar

சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த சின்னமநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர். பார்வையற்ற மாற்றுத் திறனாளியான இவர், சென்னை புறநகர் பகுதி மின்சார ரயில்களில், நாப்தலின் உருண்டை, செல் போன் கவர், ஐடி கார்டு கவர், ரேஷன் கார்டு கவர், தின்பண்ட பாக்கெட்டுகள், தைல பாட்டில்கள் உள்ளிட்டவற்றை, சக பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுடன் இணைந்து ரயில் பயணிகளிடையே விற்பனை செய்து பிழைப்பு நடத்தி வந்துள்ளார்.

கடந்த 7 மாதங்களாக சென்னை மின்சார ரயில்கள் கரோனா பொது முடக்கம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. குடும்பத்தினருடன் சொந்த ஊர் திரும்பிய சந்திரசேகர், கிராமப்பகுதிகளில் கால்நடையாக நடந்து தைல பாட்டில்கள் வியாபாரம் செய்து சொற்ப வருமானத்தை ஈட்டி வருகிறார்.

இது குறித்து சந்திரசேகர் பேசுகையில், "சென்னை புறநகர் மின்சார ரயில்களில் பார்வையற்ற மாற்றுத்திறனாளி நண்பர்களுடன் இணைந்து பயணிகளுக்குத் தேவையான பொருள்களை விற்பனை செய்து வருமானம் ஈட்டி வந்தேன். கரோனா வைரஸால் புறநகர் மின்சார ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. சென்னையில் வாடகைக் கொடுத்து வசிக்க முடியாமல் குடும்பத்தோடு மாமியார் வீட்டிற்கு வந்துவிட்டேன்.

கால்நடையாக சென்று தைலம் விற்கிறேன்

கிராமத்திற்கு வந்தாலும் வருமானமில்லாமல் குடும்பம் நடத்த முடியாது. எனக்குத் தெரிந்த தைல பாட்டில் கம்பெனியுடன் இணைந்து, கொரியர் மூலம் ஆர்டர் பெற்று, கிராமம் கிராமமாக நடந்தே சென்று தைல பாட்டில்களை விற்பனை செய்துவருகிறேன். சின்னம்மநாய்க்கன்பாளையம், பள்ளத்தாதனூர், நாட்டார்மங்கலம், அயோத்தியாபட்டணம், மின்னாம்பள்ளி ஆகிய ஊர்களுக்கு நடந்தே செல்கிறேன்.

வீட்டிலேயே முடங்கிக் கிடக்க முடியவில்லை. நடந்து சென்று விற்பனை செய்தாலும் போதிய அளவிற்கு வருமானம் இல்லை. எனவே மீண்டும் மத்திய அரசு சென்னை புறநகர் மின்சார ரயில் சேவையை தொடங்கி ஆயிரக்கணக்கான பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க முன்வர வேண்டும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:7.5% உள் ஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பு: பாஜக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்?

ABOUT THE AUTHOR

...view details