தமிழ்நாடு

tamil nadu

நெமிலி அருகே மணல் மேட்டின் மீது மோதி காவலர் உயிரிழப்பு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 22, 2023, 8:19 AM IST

Nemili Police death: நெமிலி அருகே சாலை விரிவாக்கப் பணிகளுக்காக பள்ளம் தோண்டி குவிக்கப்பட்டு இருந்த மணல் மேட்டின் மீது, இருசக்கர வாகனத்தில் வந்த காவலர் மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

ராணிப்பேட்டை:ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த கீழ்வீராணம் புதூர் மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர், இளங்கோ (29). இவர் காஞ்சிபுரம் மாவட்டம், விஷ்ணு காஞ்சி பி-2 காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு பிரிவில் காவலராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு சந்தியா (23) என்பவருடன், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. இவர்களுக்கு சுபாஷ் என்கிற ஒரு வயது குழந்தை உள்ளது.

இந்நிலையில், இவர் நேற்றைய முன்தினம் (நவ.20) இரவு, தனது பணி நேரம் முடிந்த பின்னர், இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது, பெருவளையம் அருகில் சென்று கொண்டிருந்தபோது, அப்பகுதியில் சாலை விரிவாக்கப் பணிகளுக்காக பள்ளம் தோண்டிய மண், சாலை ஓரத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்துள்ளது.

அதனால் அப்பகுதியில் மாற்று வழியும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இருப்பினும், இருட்டில் மணல் மேட்டின் மீது மோதியதில் காவலர் இளங்கோ தூக்கி வீசப்பட்டுள்ளார். பின்னர் கீழே விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்ததில், காவலர் இளங்கோ சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இரவு நேரம் என்பதால் யாரும் அவ்வழியே வராத நிலையில், அடுத்த நாள் காலை சடலமாக் கிடந்த காவலர் இளங்கோவின் உடலை, அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள் கண்டுள்ளனர். அதனை அடுத்து, நெமிலி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். அத்தகவலின் அடிப்படையில் நெமிலி காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அதன் பின்னர், விபத்தில் மரணமடைந்த காவலர் இளங்கோவின் உடலை மீட்டு, உடற்கூராய்விற்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து நெமிலி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:தேனியில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்க வேண்டிய ரூ.50 லட்சம் கடன் மோசடி..? வங்கியை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம்!

ABOUT THE AUTHOR

...view details