தமிழ்நாடு

tamil nadu

தவறான ஊசி செலுத்தியதால் இளைஞர் உயிரிழப்பு? அரசு மருத்துவமனையை முற்றுகையிட்ட மக்கள்

By

Published : Jan 26, 2022, 6:23 PM IST

அரசு மருத்துவமனை முற்றுகை

தவறான ஊசி செலுத்தியதால் இளைஞர் உயிரிழந்ததாகக் கூறி அவரது உறவினர்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.

புதுக்கோட்டை: வைத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் (23).

இவர் நேற்று (ஜன.25) மாலை சோலகம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். அப்போது அவர் நிலைதடுமாறி இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்ததாகக் கூறப்படுகிறது.

இதில் பலத்த காயமடைந்த முருகேசன் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குடல் பகுதியில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்.

அறுவை சிகிச்சை

இதைத்தொடர்ந்து அவரது உறவினர்கள் அறுவை சிகிச்சை செய்வதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். நேற்று இரவு அறுவை சிகிச்சை முடிந்தது.

முருகேசன் இன்று (ஜன.26) காலை வரை நலமாக அனைவரிடமும் பேசிக்கொண்டு இருந்துள்ளார்.

இந்நிலையில் பயிற்சி மருத்துவர் மற்றும் செவிலியர்கள் முருகேசனுக்கு இன்று காலை 9 மணி அளவில் ஊசி ஒன்றை செலுத்தியுள்ளனர். ஊசி செலுத்திய ஐந்து நிமிடத்தில் முருகேசன் உயிரிழந்தார்.

கண்ணாடி உடைப்பு

தவறான ஊசி செலுத்தியதால் இளைஞர் உயிரிழந்ததாகக் கூறி, அவரது உறவினர்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முற்றுகையிட்டனர். இதில் ஒரு சிலர் மருத்துவமனை கண்ணாடிகளை உடைத்ததாகக் கூறப்படுகிறது.

பின்னர் இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் பாலதண்டாயுதபாணி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்து இறந்து போன முருகேசனின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

தொடர்ந்து முருகேசன் உடல் உடற்கூராய்விற்காக அனுப்பிவைக்கப்பட்டது.

இதையும் படிங்க:சட்டக்கல்லூரி மாணவர் மீது தாக்குதல்; வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக்கோரிக்கை

ABOUT THE AUTHOR

...view details