தமிழ்நாடு

tamil nadu

தீவிர கண்காணிப்பில் இருக்கும் தலையிலிருந்த துப்பாக்கிக் குண்டு அகற்றப்பட்ட சிறுவன்!

By

Published : Dec 31, 2021, 11:54 AM IST

சிறுவனுக்கு தலையில் குண்டு பாய்ந்த விவகாரம்
சிறுவனுக்கு தலையில் குண்டு பாய்ந்த விவகாரம்

நான்கு மணி நேர தொடர் அறுவை சிகிச்சைக்குப் பின் தலையிலிருந்த துப்பாக்கிக் குண்டு அகற்றப்பட்ட சிறுவன், தொடர்ந்து 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் உள்ளதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்

புதுக்கோட்டை:அம்மாசத்திரம் பகுதியில் துப்பாக்கிச் சுடும் பயிற்சியின்போது குண்டுகள் பாய்ந்ததில் 11 வயது சிறுவன் படுகாயம் அடைந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இதனை அடுத்து, தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மூளை நரம்பியல் மருத்துவக் குழுவினர் சிறுவனுக்குத் தொடர்ந்து நான்கு மணிநேரம் அறுவை சிகிச்சை செய்து, தலையிலிருந்த குண்டை அகற்றினர். சிறுவன் தொடர்ந்து 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

கண்ணீரில் சிறுவனின் தாயார்

இது குறித்து சிறுவனின் தாய் கூறுகையில், "நானும் எனது மகனும் வீட்டிலிருந்தபோது, முதலில் வேகமாக என் தலை மீது ஏதோ சென்றது. அடுத்த நொடியே மீண்டும் சத்தம் வந்தது. அப்போது எனது மகன் பேச்சு மூச்சு இல்லாமல் தரையில் விழுந்தான்.

என்னவென்று பார்ப்பதற்குள் தலையிலிருந்து ரத்தம் கொட்டியது. எங்களால் என்ன என்றே யோசிக்க முடியவில்லை. எனது மகனை எப்பாடியாவது காப்பாற்றிக் கொடுங்கள்" எனக் கண்ணீர் சிந்துகிறார்.

மாவட்ட காவல் காண்காணிப்பாளர் ஆய்வு

மேலும், மாவட்ட காவல் காண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் சம்பவம் நடந்த இடத்தில் நேரில் ஆய்வுசெய்து இது பற்றி செய்தியாளரிடத்தில் கூறுகையில், "துப்பாக்கிச் சுடும் பயிற்சி மையம் மிகுந்த பாதுகாப்புடன் இருக்கும். அதுபோல இந்த இடமும் உள்ளது.

ஆனால், ஏதோ தவறுதலாக இந்தப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை செய்யப்பட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். பசுமலைபட்டி துப்பாக்கிச் சுடும் பயிற்சி மையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

காவல் துறை வழக்குப்பதிவு

துப்பாக்கிக் குண்டு சிறுவனின் தலையில் பாய்ந்த விவகாரத்தில் துப்பாக்கிச் சுடும் பயிற்சியில் ஈடுபட்ட மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினர் (சி.ஐ.எஸ்.எஃப்.) மீது புதுக்கோட்டை வெள்ளனூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றுவருவதாக மாவட்ட காவல் காண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

தலையிலிருந்த துப்பாக்கிக் குண்டு அகற்றப்பட்ட சிறுவனின் தாயார் பேட்டி

இதையும் படிங்க: 'சிபிஐ குற்றவாளிகளை மறைப்பதற்குத் துணை போவதாக உள்ளது; என் மகள் பாத்திமா மரணத்துக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவேன்'

ABOUT THE AUTHOR

...view details