தமிழ்நாடு

tamil nadu

1.5 கோடிப்பே... நாமக்கல்லில் இருந்து கத்தாருக்கு செல்லும் முட்டைகள்: ருசிகர பின்னணி

By

Published : Nov 21, 2022, 3:58 PM IST

Updated : Nov 21, 2022, 4:31 PM IST

உலக கால்பந்து போட்டி எதிரொலியாக, நாமக்கல்லில் இருந்து கத்தாருக்கு மாதத்திற்கு 1.50 கோடி அளவு முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

Etv Bharat
Etv Bharat

நாமக்கல்: கத்தாரில் நடைபெறும் உலகக்கோப்பை கால்பந்து போட்டி காரணமாக அங்கு முட்டையின் தேவை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. இதன் விளைவாக, நாமக்கல்லில் இருந்து கத்தாருக்கு ஏற்றுமதி செய்யப்படும் முட்டையின் அளவு 1.50 கோடி அளவாக அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில் 1000-க்கும் மேலான கோழிப்பண்ணைகளைக் கொண்டுள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் முட்டைகள் தமிழ்நாடு மட்டுமின்றி, வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி ஆகின்றன. குறிப்பாக சவூதி அரேபியா, ஈரான், ஈராக், ஓமன், பஹ்ரைன், மாலத்தீவு ஆகிய நாடுகளுக்கு இம்முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதன்படி மேற்குறிப்பிட்ட நாடுகளுக்கு மாதத்திற்கு 2 கோடி முட்டைகள் வீதம் ஏற்றுமதி ஆகின்றன. இவற்றில் குறிப்பாக, கத்தாருக்கு அதிகளவிலான முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

தற்போது கத்தார் நாட்டில் உலக கால்பந்து போட்டி நடைபெறுகிறது. இதனால், போட்டியில் பங்கேற்கும் நாடுகள் உள்பட உலகம் முழுவதும் இருந்து போட்டியைக் காண பல லட்சக்கணக்கான ரசிகர்கள் கத்தார் நாட்டில் குவிந்துள்ளனர். இதனால், அங்கு முட்டையின் தேவை அதிகரித்துள்ளது. இதன்படி, மாதந்தோறும் கத்தாருக்கு மட்டும் நாமக்கல்லில் இருந்து 50 லட்சம் முட்டைகள் ஏற்றுமதியான நிலையில், தற்போது மூன்று மடங்கு அதிகமாக 1.50 கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன என முட்டை ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நாமக்கல்லில் இருந்து கத்தாருக்கு 1.50 கோடி அளவு முட்டைகள் ஏற்றுமதி
நாமக்கல்லில் இருந்து கத்தாருக்கு 1.50 கோடி அளவு முட்டைகள் ஏற்றுமதி

இதுகுறித்து நாமக்கல்லைச் சேர்ந்த முட்டை ஏற்றுமதியாளர் அப்துல் ரகுமான் என்பர் கூறுகையில், 'நாமக்கல் மாவட்டத்தில் இருந்து அதிகளவில் முட்டைகள் ஏற்றுமதியாகும் நாடுகளில் கத்தாரும் ஒன்று. தற்போது, 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உலகக் கோப்பை கால்பந்து திருவிழா கத்தாரில் தொடங்கியுள்ளது.

இதன் காரணமாக உலகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான ரசிகர்கள் கத்தாரில் குவிந்துள்ளனர். இதனால் அங்கு உணவுப்பொருட்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. குறிப்பாக முட்டைகளின் தேவை அதிகரித்துள்ளது. தேவை காரணமாக, நாமக்கல் மாவட்டத்தில் இருந்து கத்தாருக்கு ஏற்றுமதி செய்யப்படும் முட்டையின் அளவு கடந்த ஒரு மாதத்தில் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.

நாமக்கல்லில் இருந்து ஐக்கிய அரபு நாடுகள், ஓமன், கத்தார், பஹ்ரைன் மற்றும் மாலத்தீவுகளுக்கு முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. நாமக்கல்லில் உற்பத்தியாகும் முட்டைகளில் இருந்து மாதந்தோறும் சுமார் 2 கோடி முட்டைகள் இந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. தற்போது, இந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் முட்டைகளின் அளவு 4 கோடியாக அதிகரித்துள்ளது.

இதில், மாதந்தோறும் கத்தாருக்கு மட்டும் 50 லட்சம் முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. தற்போது கத்தாருக்கு மாதம் ஒன்றிற்கு 1.5 கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மாதம் ஒன்றுக்கு 10 கன்டெய்னர்கள் மூலம் கத்தாருக்கு முட்டைகள் அனுப்பப்பட்டன. தற்போது 30 கன்டெய்னர்கள் அனுப்பப்பட்டு வருகின்றன’ என்றார்.

1.5 கோடிப்பே... நாமக்கல்லில் இருந்து கத்தாருக்கு செல்லும் முட்டைகள்: ருசிகர பின்னணி

இதையும் படிங்க: பசி பட்டினி இல்லா தமிழ்நாடு.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

Last Updated : Nov 21, 2022, 4:31 PM IST

ABOUT THE AUTHOR

...view details