தமிழ்நாடு

tamil nadu

முன்னாள் அதிமுக அமைச்சர் சரோஜாவிற்கு ராசிபுரம் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன்

By

Published : Apr 20, 2022, 9:57 PM IST

நிபந்தனை ஜாமீன்

சத்துணவு அமைப்பாளர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.76 லட்சம் பண மோசடி செய்த வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் சரோஜா, ராசிபுரம் நீதிமன்றத்தில் சரணடைந்ததைத் தொடர்ந்து அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி ராசிபுரம் நீதிமன்றம் உத்தரவிட்டது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சட்டப்பேரவைத்தொகுதியில் கடந்த 2016-ம் ஆண்டு வெற்றி பெற்று அதிமுக சார்பில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்தவர், சரோஜா. இந்நிலையில், ராசிபுரத்தைச் சேர்ந்த அவரது உதவியாளர் குணசீலன் மூலம் சத்துணவு அமைப்பாளர் பணி வாங்கி தருவதாகக் கூறி பல பேரிடமும் சுமார் ரூ.76 லட்சம் பணம் பெற்றதாகக் கூறப்படுகிறது.

தலைமறைவு:இந்த நிலையில் பணத்தைப் பெற்றுக்கொண்டு, பணி வழங்காமல் காலம் தாழ்த்தி வந்ததால் குணசீலனிடம் பணம் கொடுத்தவர்கள் நெருக்கடி அளித்து வந்தனர். இதனால் குணசீலன், முன்னாள் அமைச்சர் சரோஜா மீது நாமக்கல் குற்றப்புலனாய்வு காவல் துறையினரிடம் புகார் அளித்தார். அதன்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முன்னாள் அமைச்சர் சரோஜாவைக் கைது செய்ய ஆயத்தமானர். ஆனால், அதற்குள் முன்னாள் அமைச்சர் சரோஜாவும் அவரது கணவர் லோகரஞ்சனும் தலைமறைவாகினர்.

முன்ஜாமீன் மனு: இதனால், இருவரையும் காவல் துறையினர் தேடி வந்தனர். இந்தச்சூழலில் புகார் அளித்த குணசீலன் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இதுதொடர்பான வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. முன்ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் சரோஜா தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. ஆனால், அவரது முன்ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

நீதிமன்றத்தில் ஆஜர்:இந்தச்சூழலில் முன்னாள் அமைச்சர் சரோஜா மற்றும் அவரது கணவர் லோகரஞ்சன் ஆகியோர் தலைமறைவாக இருந்த நிலையில் இன்று (ஏப்.20) ராசிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில், சரோஜாவும் அவரது கணவரும் சரணடைந்தனர். அப்போது, புகார் அளித்த குணசீலன் இறந்துவிட்டதால், தன்னை வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரியும் பிணை வழங்கும்படியும் நீதிபதி முன்பு கோரிக்கை வைத்தார்.

நிபந்தனை ஜாமீன்:இதனை விசாரித்த நீதிபதி, முன்னாள் அமைச்சர் சரோஜா மற்றும் அவரது கணவர் லோகரஞ்சன் ஆகியோர் மறு உத்தரவு வரும்வரை, நாமக்கல் குற்றப்புலனாய்வு பிரிவு காவல்துறை அலுவலகத்தில் ஒவ்வொரு சனிக்கிழமையும் கையெழுத்திட வேண்டும் எனவும் இருவருக்கும் பிணை தொகையாக ரூ.25 லட்சம் நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கினார். முன்னாள் அமைச்சர் சரோஜா மற்றும் அவரது கணவர் ராசிபுரம் நீதிமன்றத்தில் திடீரென சரணடைய வந்தது நீதிமன்றம் வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: பணமோசடி வழக்கு - முன்னாள் அமைச்சர் சரோஜாவை கைது செய்ய தடை

ABOUT THE AUTHOR

...view details