தமிழ்நாடு

tamil nadu

நாமக்கல்லில் தரமற்ற உணவகங்களால் தொடரும் அதிர்ச்சி; பர்கர் சாப்பிட்ட சிறுவன் மருத்துவமனையில் அனுமதி!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 20, 2023, 4:18 PM IST

நாமக்கல்லில் தனியார் உணவத்தில் பர்கர் சாப்பிட்ட சிறுவனுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்ட நிலையில் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Etv Bharat
Etv Bharat

பர்கர் சாப்பிட்ட சிறுவனுக்கு வயிற்றுப்போக்கு

நாமக்கல்: பரமத்தி சாலையில் உள்ள ஐ வின்ஸ் என்ற தனியார் உணவகம் இயங்கி வந்தது. அங்கு கடந்த 16ஆம் தேதி ஷவர்மா சாப்பிட்ட 14 வயது சிறுமி உயிழந்தார். அதே போல் அந்த உணவகத்தில் சாப்பிட்ட சுமார் 43 பேர் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அந்த விசாரணையில் கெட்டுப்போன சிக்கன் இறைச்சியை ஐ வின்ஸ் உணவக உரிமையாளர் நவீன்குமார் விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து கறிக்கடை உரிமையாளர் சீனிவாசன் உள்பட நான்கு பேர் நாமக்கல் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு நாமக்கல் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து உணவகங்களிலும் உணவின் தரத்தை ஆய்வு செய்ய உத்தரவிட்டார். பின்னர் நாமக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள உணவகங்களில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் நாமக்கல் சேலம் சாலையில் இயங்கி வரும் ‘மிஸ்டர் பர்கர்’ என்ற தனியார் உணவகத்தில் நேற்றிரவு (செப்.19) பர்கர் சாப்பிட்ட நாமக்கல் பூங்கா நகரைச் சேர்ந்த 18 வயது சிறுவன் ஒருவருக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதனையடுத்து அச்சிறுவன் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அந்த சிறுவனுக்கு மருத்துவர்கள் தொடர் சிகிச்சையளித்து வருகின்றனர்.

ஏற்கனவே நாமக்கல் பரமத்தி சாலையில் உள்ள ஐவின்ஸ் என்ற தனியார் உணவகத்தில் சவர்மா, கிரில் சிக்கன் சாப்பிட்டு சிறுமி ஒருவர் உயிரிழந்ததோடு, 43 பேர் உடல் நலம் பாதிப்படைந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு சிறுவன் சேலம் சாலையில் உள்ள உணவகத்தில் பர்கர் சாப்பிட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வரும் சம்பவம் நாமக்கல்லில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ஷவர்மா சாப்பிட்டு மாணவி உயிரிழப்பு விவகாரம்.. சென்னையில் உணவு பாதுகாப்புத்துறை அதிரடி ரெய்டு... 350 கிலோ உணவுகள் பறிமுதல்!

ABOUT THE AUTHOR

...view details