தமிழ்நாடு

tamil nadu

திருக்கடையூர் அபிராமி ஆலயத்தில் அமாவாசையை பௌர்ணமியாக்கிய திருவிளையாடல் நிகழ்வு

By

Published : Jan 22, 2023, 7:22 PM IST

திருக்கடையூர் அபிராமி ஆலயத்தில் அமாவாசையை பௌர்ணமியாக்கிய திருவிளையாடல் நிகழ்வு

உலகப்புகழ்பெற்ற திருக்கடையூர் அபிராமி உடனாகிய அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் ஸ்ரீஅபிராமி அம்மன் அபிராமிபட்டருக்காக அமாவாசையை பௌர்ணமியாக்கிய திருவிளையாடல் வரலாற்றுப்படி நிகழ்த்தப்பட்டது.

திருக்கடையூர் அபிராமி ஆலயத்தில் அமாவாசையை பௌர்ணமியாக்கிய திருவிளையாடல் நிகழ்வு

மயிலாடுதுறை:தரங்கம்பாடி தாலுகா, திருக்கடையூர் அபிராமி அம்மன் உடனாகிய அமிர்தகடேஸ்வரர் ஆலயம் உலகப்புகழ்பெற்றதாகும். இங்கு தை அமாவாசை தினத்தன்று ஸ்ரீஅமிராமி அம்மனின் பக்தரான அபிராமிபட்டர் வழிபட, அந்த நேரத்தில் கோயிலுக்கு வந்த சரபோஜி மன்னர் இன்று என்ன திதி என்று கேட்டிருப்பார்.

அபிராமிபட்டர் அபிராமி அம்மனை நினைத்து தியானத்தில் இருந்த நிலையில், பௌர்ணமி தினம் என்று தவறுதலாக கூறியிருப்பார். பௌர்ணமி வரவில்லை என்றால் மரணதண்டனை விதிக்கப்படும் என்று மன்னர் உத்தரவிட,இதனையடுத்து அபிராமிபட்டர் எரியும் நெருப்பிற்கு மேலே ஊஞ்சல் அமைத்து அபிராமி அம்மனை நினைத்து அபிராமி அந்தாதியைப் பாடியுள்ளார்.

100 கயிறுகள் கொண்ட ஊஞ்சலில் ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு கயிறாக அறுத்துக்கொண்டு வரும்போது 79வது பாடலான

“விழிக்கே அருள் உண்டு அபிராம வல்லிக்கு வேதம் சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சு உண்டு
எமக்கு அவ்வழி கிடக்க
பழிக்கே சுழன்று, வெம் பாவங்களே
செய்து, பாழ் நரகக் குழிக்கே
அழுந்தும் கயவர் தம்மோடு
என்ன கூட்டு இனியே? "

என்ற பாடலை பாடினார். அப்போது அம்மன் நேரில் தோன்றி, தனது தோட்டை வீசி எறிந்து, முழுநிலவை தோன்றச்செய்து அபிராமிபட்டருக்கு அருள் வழங்கியதாக இந்த ஆலய வரலாறு கூறுகின்றது. அதன்படி தை அமாவாசையான நேற்று அபிராமிபட்டரின் உயிரைக் காப்பாற்றுவதற்காக அபிராமி அம்மன் நேரில் தோன்றி தை அமாவாசையை பௌர்ணமி ஆக்கிய நிகழ்வு நடத்தப்பட்டது.

இரவு மகா மண்டபத்தில் அபிராமி பட்டர் சிலை வைக்கப்பட்டு ஸ்ரீ அபிராமி அம்மன் வெள்ளி விமானத்தில் எழுந்தருளினார். தருமபுர ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் ஓதுவார்கள் அபிராமி அந்தாதியின் பாடல்களை பாடினர்.

ஒவ்வொரு பாடலுக்கும் அம்பாளுக்கு அர்ச்சனை செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்று கயிறு அறுக்கப்பட்டது. 79-வது பாடலின் முடிவில் நிலவு போன்ற தோற்றத்தில் அமைக்கப்பட்ட மின் விளக்கு எரியவிடப்பட்டது. தொடர்ந்து அம்பாளுக்கு மஹா தீபாராதனை நடத்தப்பட்டு 100 பாடல்கள் பாடி நிறைவு செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

இதையும் படிங்க:Video: பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் ஆலயத்தில் ஆளுநர் ரவி சாமி தரிசனம்

ABOUT THE AUTHOR

...view details