தமிழ்நாடு

tamil nadu

திருவாவடுதுறை ஆதீனத்தில் வெகுவிமர்சையாக நடைபெற்ற பட்டினப்பிரவேசம்

By

Published : Jan 29, 2023, 7:32 AM IST

Updated : Jan 29, 2023, 7:46 AM IST

திருவாவடுதுறை ஆதீனத்தில் பட்டினப்பிரவேசம் நடைபெற்றது

ஸ்ரீநமச்சிவாய மூர்த்திகள் குருபூஜை விழாவையொட்டி 24ஆவது ஆதீன குருமகா சன்னிதானம் சிவிகை பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார்.

வெகுவிமர்சையாக நடைபெற்ற பட்டினப்பிரவேசம்

மயிலாடுதுறை:குத்தாலம் அருகே 14ஆம் நூற்றாண்டில் ஆதீன குருமுதல்வர் நமச்சிவாய மூர்த்தி சுவாமிகளால் தோற்றுவிக்கப்பட்ட பழைமை வாய்ந்த திருவாவடுதுறை ஆதீனம் உள்ளது. இந்த ஆதீனத்தில் குருமுதல்வரின் குருபூஜை ஆண்டுதோறும் தை மாதத்தில் 10 நாட்கள் "நமச்சிவாய மூர்த்திகள் மகர தலைநாள் குருபூஜை" விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு குருபூஜை ஜனவரி 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது. 10ஆம் நாளான நேற்று (ஜன 28) சிகர விழாவான பட்டனப் பிரவேசம் நடைபெற்றது. இந்த விழாவையொட்டி திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் கோமுக்தீஸ்வரர் சுவாமி கோயிலில் தரிசனம் மேற்கொண்டு, ஸ்ரீநமச்சிவாய மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்தார்.

இதனைத் தொடர்ந்து, சிறப்பாக சமயப் பணியாற்றிய 10 பேருக்கு தலா ரூ.10,000 வீதம் மொத்தம் 1 லட்சம் ரூபாயை அருட்கொடையாக வழங்கி ஆசி வழங்கினார். திருவாவடுதுறை ஆதீனம் 1 லட்சத்து எட்டு ருத்ராட்ச மணிகளால் ஆன தலைவடம் அணிந்து, பவளமணி, கெண்டைமணி, பட்டு தலைக்குஞ்சம் அலங்காரத்துடன் தங்கப் பாதரட்சை அணிந்து, தம்பிரான் சுவாமிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் புடைசூழ சிவிகை பல்லக்கில் சிவிகாரோஹணம் செய்தருளினார்.

தொடர்ந்து, பல்லக்கின் முன்னே 10 குதிரைகள் ஆட்டத்துடன், வானவேடிக்கை முழங்க பக்தர்கள் பல்லக்கினை சுமந்து ஆதீனத்தின் நான்கு வீதிகளிலும் உலா வந்து பட்டனப்பிரவேசம் நடந்து முடிந்தது. வழியெங்கும் பொதுமக்கள் தங்கள் வீடுகளின் முன்பு திருவாவடுதுறை ஆதீனத்துக்கு பூரணகும்ப மரியாதையுடன் வரவேற்பு அளித்து, தீபாராதனை எடுத்து வழிபாடு நடத்தினர்.

இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி மயிலாடுதுறை கோட்டாட்சியர் யுரோகா, மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா தலைமையில் ஏடிஎஸ்பி, 6 டிஎஸ்பிகள், 9 காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட 250 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: பழனி முருகன் கோயிலில் ஆகம விதிப்படியே மண்டல பூஜை - அறநிலையத் துறை

Last Updated :Jan 29, 2023, 7:46 AM IST

ABOUT THE AUTHOR

...view details