தமிழ்நாடு

tamil nadu

கொடூர குற்ற வழக்குகளை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக்குழு - தமிழ்நாடு அரசு தகவல்

By

Published : Nov 7, 2022, 10:29 PM IST

தமிழ்நாட்டில் கொலை கொள்ளை துப்பாக்கிச் சூடு வெடிபொருள் போன்ற கொடூர குற்ற வழக்குகளை விசாரிக்க தமிழ்நாடு முழுவதும் அந்த அந்த காவல் நிலையத்தில் தனி சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது

கொடூர குற்ற வழக்குகளை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு- தமிழ்நாடு அரசு
கொடூர குற்ற வழக்குகளை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு- தமிழ்நாடு அரசு

மதுரை:திருச்சி அரியமங்கலம் பகுதியைச்சேர்ந்த சதீஷ் குமார், சங்கர் ஆகியோர் ஒரு கொலை வழக்கில் 06.11.2017 அன்று திருச்சி 3ஆவது கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி வழங்கிய தண்டனையை ரத்து செய்ய கோரி மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதிகள் நிஷா பானு, ஆனந்த் வெங்கடேஷ் அமர்வில் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை ஏற்கெனவே விசாரணை செய்த நீதிபதிகள் கொலை குற்றங்களை சட்டம் ஒழுங்கு போலீசாரே விசாரிப்பதால், வேலை பளுவால் விசாரணையைத் தொய்வின்றி, தீவிரமாக நடத்த சட்டம் ஒழுங்கு போலீசாரால் இயலவில்லை. எனவே, கொலைக்குற்றங்களை விசாரிப்பதற்கு காவல் துறையில் புதிதாக தனி பிரிவை உருவாக்க வேண்டும் எனவும்; இதுகுறித்து தமிழ்நாடு காவல்துறைத்தலைவர் (DGP) விரிவான பதில் அளிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்து இருந்தனர்.

இந்த வழக்கு மீண்டும் இன்று நீதிபதிகள் ரமேஷ் மற்றும் ஆனந்த் வெங்கடேஷ் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது அரசு தரப்பில் அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா ஆஜராகி, ’நீதிமன்ற உத்தரவு பிறப்பித்ததின் அடிப்படையில் கொலை, கொள்ளை, மர்ம சாவு, கடத்தல் வழக்கு, பெரிய விபத்துகள் சாதி, மதம் சம்பந்தமான வழக்குகள் மற்றும் கொடூர குற்றங்கள் குறித்து விசாரணை செய்வதற்கு காவல் துறையினருக்கு சிறப்பு பயிற்சி நடத்தப்பட உள்ளது.

மேலும் காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், கோயம்புத்தூர், சேலம், மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், திருநெல்வேலி, ஆகிய மாவட்டத்தின் தலைநகரங்களில் தனியாக சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுக்கள் மேலே கூறப்பட்டுள்ள வழக்குகளை விசாரணை செய்வார்கள் இந்த குழுவில் 2 காவல்துறை ஆய்வாளர் மற்றும் 10 காவலர்கள் இருக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது.

அதேபோல் கோயம்புத்தூரில் அனைத்து காவல் நிலையங்களிலும் விசாரணை பிரிவு மற்றும் விசாரணை புலனாய்வு பிரிவு என தனித்தனியாக விசாரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு காவல்துறை தலைவர் வெளியிட்டுள்ளார்’ என அறிக்கையாகத் தாக்கல் செய்தார்.

இதனைப்பதிவு செய்த நீதிபதிகள் நீதிமன்ற உத்தரவை விரைந்து செயல்படுத்திய தமிழ்நாடு அரசுக்கும் காவல் துறைக்கும் பாராட்டுகளைத் தெரிவித்தனர். மேலும் இது போன்று சிறப்பு புலனாய்வுக்குழு அமைப்பதன் மூலம் குற்ற வழக்குகளில் இருந்து குற்றவாளிகள் தப்பிப்பதைத் தடுக்க முடியும் என கருத்துகளைத் தெரிவித்த நீதிபதிகள் இதனை செயல்பாட்டுக்கு கொண்டு வந்த தமிழ்நாடு காவல்துறைத் தலைவருக்கும் பாராட்டுகளைத் தெரிவித்தனர். மேலும் வழக்கு விசாரணைக்காக ஒத்தி வைக்கப்பட்டது.

இதையும் படிங்க:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பாவுக்கு பிரதமர் மோடி மரியாதை

ABOUT THE AUTHOR

...view details