தமிழ்நாடு

tamil nadu

15 ஆண்டு கால காத்திருப்பு - முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த அர்ச்சகர்

By

Published : Aug 17, 2021, 11:03 AM IST

priest-arunkumar-thanked-the-chief-minister

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தில் பணி ஆணை பெற்ற மதுரையை சேர்ந்த அருண்குமார் தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

மதுரை: தமிழ்நாட்டில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டம் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது கொண்டுவரப்பட்டது. அந்த சட்டம் 2006ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தாலும் முழுதாக நடக்கவில்லை.

இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்று 100ஆவது நாளான ஆகஸ்ட் 14ஆம் தேதி, அர்ச்சகர் பயிற்சி முடித்த 29 ஓதுவார்கள், அர்ச்சகர்கள் என 58 பேருக்குப் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

பெண் ஓதுவார் சுஹாஞ்சனா

இவர்கள் சென்னை மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோயில், மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோயில், திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் உள்ளிட்ட 58 கோயில் பணியாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இதில் செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அருகே சேலையூரை சேர்ந்த சுஹாஞ்சனா (27), மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோயிலில் ஓதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பணி ஆணை பெற்ற அர்ச்சகர்கள்

இவர் ஆகஸ்ட் 15ஆம் தேதி அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள தேனுபுரீஸ்வரர் கோயிலில் ஓதுவார் பணியை சுஹாஞ்சனா தொடங்கினார். அப்போது அவர் திருவாசகம் பாடியது சமூக வலைதளங்களில் வைரலாகியது.

நன்றி தெரிவிக்கும் அருண்குமார்

இந்நிலையில், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தின் அடிப்படையில் முதலமைச்சர் ஸ்டாலின் கையால் பணி ஆணை பெற்ற மதுரை ஆனையூர் பகுதியைச் சேர்ந்த அருண்குமார் என்பவர் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலின் உப கோயிலான அருள்மிகு தேரடி கருப்பசாமி திருக்கோயிலில் அர்ச்சகராக பணியை தொடங்கியுள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலின்

இதுகுறித்து அருண்குமார் கூறுகையில், “கடந்த 2006ஆம் ஆண்டு அர்ச்சகர் பயிற்சி பெற்று 15 ஆண்டுகளாக அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தில் தகுந்த வேலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருந்தேன். எனது குடும்பம் மிகுந்த ஏழ்மையில் இருந்த நிலையிலும் தனியார் கோயில்களில் அர்ச்சனை பூஜைகள் செய்து அதன் மூலம் கிடைத்த வருவாயை வைத்து வாழ்ந்துவந்தேன்.

இந்நிலையில் முதலமைச்சரின் உத்தரவால் அவரது கையால் பணி ஆணையைப் பெற்ற மறுநாளே மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலின் உப கோயிலான தேரடி கருப்பசாமி கோயிலில் அர்ச்சகராக நியமிக்கப்பட்டு இன்று முதல் அர்ச்சனை செய்தது தனக்கு மிகுந்த பாக்கியம்” என கூறினார்.

பணி ஆணை பெற்ற அருண்குமார் மகிழ்ச்சியுடன் முதலமைச்சருக்கும், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கும் தனது நன்றியை தெரிவித்தார்.

இதையும் படிங்க : அர்ச்சகர் திட்டத்துக்கு எதிராக 2 வழக்குகள் - வழக்குகளை இணைத்து விசாரிக்க உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details