மதுரையின் முக்கிய அடையாளமாக திகழும் சித்திரை திருவிழாவில் வைகையாற்றில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்வு உலகப்புகழ் வாய்ந்தது. மதுரை ஆழ்வார்புரம் அருகே ஆல்பர்ட் விக்டர் மேம்பாலத்துக்கு கீழே ஒவ்வொரு சித்திரை திருவிழாவின்போதும் திருமாலிருஞ்சோலையில் இருந்து புறப்பட்டு வருகின்ற கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அருளாசி வழங்குவது வழக்கம்.
இந்த விழாவிற்காக ஒவ்வொரு முறையும் மதுரை மாநகராட்சி சார்பில் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்குவதற்கு வசதியாக தற்காலிக பாலம் அமைத்து வருகின்றனர். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் 45 லட்சம் ரூபாய் வரை செலவாகும்.
இதையடுத்து செலவினத்தை குறைக்கும் பொருட்டு தற்போது சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் மதுரை மாநகர் முழுவதும் பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதில் ஒன்று வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் இடத்தில் நிரந்தர பாலம் அமைப்பது. கரோனா வைரஸ் தொற்று பரவலை அடுத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இப்பாலம் பணிகள் தற்போது மிக விறுவிறுப்பாக நடைபெறத் தொடங்கியுள்ளன. இப்பாலத்தின் மீது தற்போது கான்கிரீட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சில வாரங்களுக்குள் இந்தப் பணி நடைபெற்று முடியும் என மாநகராட்சி தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு பூணூல் மாற்றி வழிபாடு!