தமிழ்நாடு

tamil nadu

மக்களின் அடிப்படை தேவைகளுக்காக பாடுபடுவேன்; மதுரை துணை மேயர் வேட்பாளர்

By

Published : Mar 4, 2022, 7:07 AM IST

மதுரை மாநகராட்சி மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற பாடுபடுவேன் என்று திமுக கூட்டணியின் துணை மேயர் வேட்பாளர் நாகராஜன் உறுதியளித்தார்.

மதுரை துணை மேயர்
மதுரை துணை மேயர்

மதுரை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மதுரை மாநகராட்சியை பொறுத்தவரை திமுக அதன் கூட்டணி கட்சிகள் அதிக இடங்களை கைப்பற்றியுள்ளன. இன்று (மார்ச் 04) மேயர், துணை மேயருக்கான மறைமுக தேர்தல் நடைபெறவுள்ளது.

முன்னதாக திமுக தலைமை மதுரை மாநகராட்சியின் துணை மேயர் பதவியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கீடு செய்துள்ளது. அதன்படி மார்க்சிஸ்ட் கட்சியின் துணை மேயர் வேட்பாளராக 80ஆவது வார்டில் வெற்றிபெற்ற நாகராஜனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து நாகராஜனை மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் நேற்று (மார்ச் 03) அறிமுகம் செய்து வைத்தார்.

மதுரை துணை மேயர் வேட்பாளர்

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சு. வெங்கடேசன், “மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பல்வேறு மக்கள் உரிமை போராட்டங்களில், தன்னுடைய கல்லூரி காலம் முதலே பங்கேற்று வந்தவர் நாகராஜன். முப்பதாண்டுகளாக கட்சிப் பணியில் பல்வேறு பொறுப்புகளில் தன்னைத் தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டுவருகிறார். இவரை மதுரை மாநகராட்சியின் துணை மேயர் வேட்பாளராக அறிவிப்பதில் கட்சி பெருமையடைகிறது” என்றார்.

இதைத்தொடர்ந்து துணை மேயர் வேட்பாளர் நாகராஜன் கூறுகையில், “மதுரை மாநகர வளர்ச்சி குழுவில் இடம்பெற்றுள்ளதால் இங்குள்ள மக்கள் தேவைகள் என்ன என்பதை நன்கு அறிவேன். அதனடிப்படையில், துணை மேயர் பொறுப்பில் தேவையான வளர்ச்சி பணிகளில் முழு அக்கறை காட்டுவதோடு, மதுரை மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற பாடுபடுவேன்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:மேயராகப் போட்டியிடும் 10ஆவது மட்டுமே படித்த மாமன்ற உறுப்பினர்

ABOUT THE AUTHOR

...view details