தமிழ்நாடு

tamil nadu

நியோமேக்ஸ் நிதி மோசடி வழக்கு விவகாரம்; விசாரணை அதிகாரிகளை எச்சரித்த நீதிபதி!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 19, 2023, 8:52 PM IST

நியோமேக்ஸ் நிதி மோசடி வழக்கு விவகாரம் - விசாரணை அதிகாரிகளை எச்சரித்த நீதிபதி
நியோமேக்ஸ் நிதி மோசடி வழக்கு விவகாரம் - விசாரணை அதிகாரிகளை எச்சரித்த நீதிபதி

Neomax case: நிதி மோசடி செய்த நியோமேக்ஸ் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த மதுரைக்கிளை நீதிபதி, முறையான விசாரணையை மேற்கொள்ளுமாறு விசாரணை அதிகாரிகளை எச்சரித்தார்.

மதுரை:நியோமேக்ஸ் மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த பிரபல நிதி நிறுவனம். இந்த நிதி நிறுவனம் மூலம் பல்வேறு பெயர்களில் 20க்கும் மேற்பட்ட கிளை நிறுவனங்களை தமிழகம் முழுவதும் உருவாக்கி, பன்மடங்கு வட்டி தருவதாகக் கூறி பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில், நெல்லை, பாளையங்கோட்டை, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட கிளைகளை நிர்வகித்து வந்த 17 நிர்வாகிகள் இதுவரை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் சைமன் ராஜா, கபீல், பத்மநாபன், இசக்கிமுத்து, சகாயராஜ் ராஜா ஆகிய 5 நபருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த கவுதமி என்பவர் தாக்கல் செய்த மனுவில், “என் கணவர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். ஒரு கோடி ரூபாய் நியோமேக்ஸில் முதலீடு செய்தேன். சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் ஏக்கர் கணக்கில் நிலம் வாங்கி வைத்து உள்ளோம்.

மத்திய அரசின் பெரிய திட்டங்கள் வர உள்ளதால், இதில் இணைந்து அதிக லாபம் பெறலாம் என ஆசை வார்த்தை கூறினார்கள். ஆனால் கூறியபடி பணமோ, நிலமோ வழங்கவில்லை. இவர்கள் முதலீட்டாளர்களின் பணத்தை கல்லூரிகள், வெளிநாடுகளில் முதலீடு செய்து உள்ளனர். பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி நடந்து உள்ளது. தற்போது மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மோசடியில் ஈடுபட்டவர்களோடு, இந்த வழக்கை விசாரிக்கும் விசாரணை அதிகாரிகள் சிலர் உறுதுணையாக உள்ளதாக சந்தேகம் எழுகிறது. மேலும், முக்கிய குற்றவாளிகளை கைது செய்வதில் கால தாமதம் ஆகிறது. எனவே, பாதிக்கப்பட்டவர்களின் நலன் கருதி இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி K.K.ராமகிருஷ்ணன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், “முக்கிய குற்றவாளிகளை இதுவரை கைது செய்யவில்லை. கைது செய்யப்பட்டவர்களில் சிலர் ஜாமினில் வெளி வந்துள்ளனர். பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி தொடர்பான இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்” என்றார்.

அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான குற்றவியல் வழக்கறிஞர் செந்தில்குமார், “முக்கியமான குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். நேற்று 2 பேர் கைது செய்யப்பட்டனர். விரைவில் மற்றவர்களையும் கைது செய்து விடுவோம். இதுவரை 5 ஆயிரம் சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. புதிய டிஎஸ்பி நியமிக்கப்பட்டு உள்ளார். உரிய முடிவு எட்டப்படும்” என வாதிட்டார்.

இதைத் தொடர்ந்து நீதிபதி, குற்றம் சாட்டப்பட்டவர்களை விரைவாக கைது செய்ய வேண்டும் என்றும், தேவைப்பட்டால் இந்த வழக்கை விசாரிக்கும் பொருளாதார குற்றப்பிரிவு விசாரணை அதிகாரிகளின் தொலைபேசி தொடர்புகள் சோதனை செய்ய நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.

தொடர்ந்து, இந்த வழக்கில் பிரதான குற்றவாளிகளை இதுவரை ஏன் கைது செய்யவில்லை என கேள்வி எழுப்பிய நீதிபதி, உரிய நடவடிக்கை எடுத்து பதில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், இல்லையென்றால் சிபிஐ விசாரணைக்கு மாற்ற நேரிடும் எனவும் கூறி வழக்கு விசாரணையை செப்டம்பர் 29ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

இதையும் படிங்க:நியோமேக்ஸ் இயக்குநர்கள் கமலகண்ணன் மற்றும் சிங்காரவேலன் மதுரை மத்திய சிறையில் அடைப்பு!

ABOUT THE AUTHOR

...view details