தமிழ்நாடு

tamil nadu

"பழனி முருகன் கோவிலில் காலிப்பணியிடங்களை நிரப்புவதில் வெளிப்படைத்தன்மை வேண்டும்"

By

Published : May 11, 2023, 4:49 PM IST

பழனி முருகன் கோவிலில் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணையில், கோவிலுக்கு எதிராகப் புகார் தெரிவித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள் என்ற நிபந்தனையை நீக்க இந்து அறநிலையத்துறை ஆணையருக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

mdu
பழனி

மதுரை: திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், "திண்டுக்கல் மாவட்டம், பழனியில் பிரசித்திபெற்ற தண்டாயுதபாணி கோவிலில் உள்ள 281 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பாணையை அறங்காவலர் குழு கடந்த மார்ச் மாதம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, ஆசிரியர்கள், நூலகர், அலுவலக உதவியாளர், சமையலர், கணினி பொறியாளர், தொழில்நுட்ப உதவியாளர்கள், நாதஸ்வர வித்வான், தவில் வித்வான், சுகாதார ஆய்வாளர் உள்ளிட்ட 41 வகையான பணிகளில் 281 காலிப்பணியிடங்களை நிரப்பப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பாணையில் அரசு உள் இட ஒதுக்கீடு அறிவிப்பு இல்லை. மேலும், இந்த அறிவிப்பில் பல்வேறு விதிமுறை மீறல்கள் உள்ளன. அதேபோல், இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் மற்றும் அவரது குடும்பத்தார், கோவிலுக்கு எதிராக எந்த வழக்கும் தொடர்ந்திருக்கக்கூடாது - அவ்வாறு தொடர்ந்திருந்தால் அவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அடிப்படை உரிமை மீறலாகும். எனவே, இந்த அறிவிப்பாணையை ரத்து செய்துவிட்டு, உரிய விதிமுறைகளை பின்பற்றி புதிய அறிவிப்பாணையை வெளியிட வேண்டும்" என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு இன்று(மே.11) நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், ஸ்ரீமதி ஆகியோர் அடங்கிய அமர்வின் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விவேக் பாரதி, "இந்த அறிவிப்பாணையில் உரிய விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. சட்ட விதிகளுக்கு முரணான முறையில் அறிவிப்பு உள்ளது.

நேர்முகத் தேர்வின் அடிப்படையில் காலிப் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. இதில் முறைகேடு நடக்க வாய்ப்பு உள்ளது. எழுத்துத்தேர்வு மற்றும் வேலையின் தன்மையைப் பொறுத்து நேரடியாக செய்முறைத் தேர்வு மூலம் தேர்வு செய்ய வேண்டும். அதனால், முரண்பாடான இந்த அறிவிப்பாணையை ரத்து செய்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என வாதிட்டார்.

இதனைத் தொடர்ந்து நீதிபதிகள், இந்த வழக்குப் பொதுநல வழக்காக தொடரப்பட்டுள்ளது - ஆனால், மனுதாரர் வேலை கேட்டு விண்ணப்பிக்கவில்லை, பாதிக்கப்படவும் இல்லை என்பதால் இந்த அறிவிப்பாணைக்குத் தடை விதிக்க முடியாது என்று தெரிவித்தனர்.

அதே நேரத்தில், 'விண்ணப்பதாரர்கள், அவர்களது குடும்பத்தினர் கோவிலுக்கு எதிராகப் புகாரோ வழக்கோ பதிந்து இருக்கக் கூடாது, அவ்வாறு இருந்தால் விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்கள்' என்ற நிபந்தனை அடிப்படை உரிமை மீறலாகும் என்பதால், அந்த நிபந்தனையை இந்து அறநிலையத்துறை ஆணையர் நீக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

மேலும், இந்த காலிப்பணியிடங்களுக்கு 80 ஆயிரம் விண்ணப்பங்கள் வரப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளதால், பணி நியமனங்களில் வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்தனர்.

இதையும் படிங்க: ஃபர்ஹானா திரைப்படம் மத உணர்வுகளுக்கு எதிரானது அல்ல - தயாரிப்பு நிறுவனம் விளக்கம்!

ABOUT THE AUTHOR

...view details