கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சின்னசாமி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல்செய்திருந்தார். அதில், "கரூர் லைட் ஹவுஸ் ரவுண்டானா அருகே மகாத்மா காந்தியின் சிலை உள்ளது. இந்தச் சிலை மிகவும் பழமைவாய்ந்தது.
மகாத்மா காந்தியின் சிலை சேதமடைந்த நிலையில் உள்ளதால், கரூர் மாவட்ட நெசவு மற்றும் பனியன் தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கம் சார்பாக மகாத்மா காந்திக்கு பெரிய அளவிலான வெண்கல உருவச் சிலையை அமைக்க கோரிக்கைவிடுத்து அதற்காக கரூர் மாவட்ட ஆட்சியர் அனுமதி அளித்தார்.
ஆனால் கரூர் ரவுண்டானா லைட் ஹவுஸ் அருகே மகாத்மா காந்தியின் உருவச் சிலையை அமைக்க நெடுஞ்சாலைத் துறையிடம் அனுமதி வழங்கிய பின்பு உருவச் சிலையை அமைக்க மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்க வேண்டும். ஆனால் நெடுஞ்சாலைத் துறையின் அனுமதியின்றி கரூர் மாவட்ட ஆட்சியர் மகாத்மா காந்தியின் சிலையை அமைக்க அனுமதி வழங்கியுள்ளார்.
மேலும் வெண்கலச் சிலை அமைப்பதால் உருவச்சிலை குறுகிய காலத்தில் சேதமடைய வாய்ப்புள்ளது. எனவே கரூர் ரவுண்டானா லைட் ஹவுஸ் அருகே மகாத்மா காந்தியின் உருவச் சிலையை அமைக்க அளித்த அனுமதியை ரத்துசெய்து உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த மனுவானது நீதிபதிகள் சுந்தரேஷ் - ஆனந்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கில் எவ்வித முகாந்திரமும் இல்லாததால் வழக்கைத் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.