தமிழ்நாடு

tamil nadu

திருமணத்தை மீறிய உறவைக் கண்டித்த கணவர்: பிளான் போட்டு கொலை செய்த மனைவி!

By

Published : Jun 13, 2021, 9:51 AM IST

கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம் அருகே திருமணத்தை மீறிய உறவைக் கண்டித்த கணவரை கொலை செய்த மனைவி உள்ளிட்ட ஆறு பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

extramarital affair
Wife plened to killed her husband

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்த கூரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்(55). இவர் காவேரிப்பட்டணம் பகுதியில் கூழ் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு ஜெயா (45), தவமணி (38), முனியம்மாள் (35) என மூன்று மனைவிகள் உள்ளனர்.

இதில் முதல் இரண்டு மனைவிகளும் குடும்பப் பிரச்னை காரணமாக, ராஜேந்திரனை விட்டுப் பிரிந்து விட்டனர். தற்போது ராஜேந்திரன் தனது மூன்றாவது மனைவி முனியம்மாளுடன் வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் கிருஷ்ணகிரி அடுத்த கனகமுட்லு கிராமத்தைச் சேர்ந்த செங்கல் வியாபாரி குமார் (33) என்பவருக்கும்; ராஜேந்திரனின் மனைவி முனியம்மாளுக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

ராஜேந்திரன் கூழ் வியாபாரத்திற்காக அதிகாலையிலேயே வெளியே சென்றுவிடுவதால், இதனைப் பயன்படுத்திக்கொண்டு முனியம்மாளும், குமாரும் அடிக்கடி தனிமையில் இருந்து வந்துள்ளனர்.

கணவரைக் கொல்ல சதி செய்த மனைவி

இந்நிலையில், தனது மனைவியின் திருமணத்தை மீறிய உறவை அறிந்து கோபமடைந்த ராஜேந்திரன், தனது மனைவியை கடுமையாக கண்டித்துள்ளார். இது குறித்து முனியம்மாள், குமாரிடம் தெரிவிக்கவே இருவரும் திட்டம்போட்டு ராஜேந்திரனை கொலை செய்ய முடிவு செய்தனர்.

ராஜேந்திரன் தினமும் அதிகாலையில் கூழ் வியாபாரம் செய்வதற்காக, இருசக்கர வாகனத்தில் சென்று வருவது வழக்கம். இதனை குமாரும் அவரது நண்பர்களும் நோட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று (ஜுன் 12) ராஜேந்திரன் வழக்கம்போல், அதிகாலையில் கூழ் வியாபாரம் செய்ய தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார்.

அப்போது காவேரிப்பட்டணம் அருகிலுள்ள வேங்கை நகர் என்னும் இடத்தில் குமாரும், அவரது நண்பர்களும் சேர்ந்து ராஜேந்திரனை வழிமறித்து கட்டையால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவேரிப்பட்டனம் காவல் துறையினர், ராஜேந்திரனின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் திருமணத்தை மீறிய உறவுக்கு இடையூறாக ராஜேந்திரன் இருந்ததால் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதனையடுத்த, முனியம்மாள், குமார், அவரது நண்பர்கள் பவுன்ராஜ், திருப்பதி, ரகு, பார்த்திபன் ஆகிய 6 பேரைக் கைது செய்து காவல் துறையினர் சிறையில் அடைத்தனர். மேலும், குமாரின் நண்பர்கள் வடிவேல், சதீஸ் ஆகிய இருவரையும் காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details