கரூர்:விநாயகர் சதுர்த்திக்காக ஆர்டர் செய்யப்பட்ட சிலைகளை சீல் வைத்து, அதிகாரிகள் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தி வருவதாக சிவசேனா கட்சியின் தமிழக செயலாளர் குரு ஐயப்பன் தெரிவித்து உள்ளார்.
கரூர் - திருச்சி நெடுஞ்சாலை பகுதியில் அமைந்துள்ள சுங்க கேட் பகுதியில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 12 பேர் கடந்த நான்கு மாதங்களாக விநாயகர் சிலையை விற்பனைக்காக தயார் செய்து வந்தனர். இந்நிலையில், கடந்த செப்டம்பர் 14 ஆம் தேதி விநாயகர் சிலைகள் ரசாயனம் கலந்து தயாரிக்கப்படுவதாக பெறப்பட்ட புகாரின் அடிப்படையில், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய கரூர் மாவட்ட சுற்றுச்சூழல் உதவி பொறியாளர் தலைமையில், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மற்றும் வருவாய் துறையினர் சோதனையில் ஈடுபட்டு 250க்கும் மேற்பட்ட சிலைகளை விற்பனை செய்யக்கூடாது எனவும், சோதனை அறிக்கை வந்தவுடன் சிலைகளை விற்பனை செய்யலாம் என்றும் கூறி குடோனுக்கு சீல் வைத்தனர்.
அதனைத்தொடர்ந்து, நேற்று (செப்.15) விநாயகர் சிலைகளுக்கு ஆர்டர் வழங்கிய நபர்கள் சீல் வைக்கப்பட்ட இடத்திற்கு வந்து குறித்த நேரத்தில் சிலைகள் வழங்கப்பட வேண்டும் என கூறி வட மாநில சிலை தயாரிப்பாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் கரூர் நகர காவல் துணை கண்காணிப்பாளர் சரவணன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில், இன்று (செப்.16) ஆம் தேதி கரூர் சுங்க கேட் பகுதியில் சிலை தயாரிக்கும் இடத்தில் தமிழ்நாடு சிவசேனா கட்சி சார்பில் 150 சிலைகள் ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், சிவசேனா கட்சி மாநில செயலாளர் குரு ஐயப்பன் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் சீல் வைக்கப்பட்ட உள்ள இடத்தை முற்றுகையிட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பசுபதிபாளையம் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ஓம் பிரகாஷ், சிவசேனா கட்சி மாநில செயலாளர் குரு ஐயப்பனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனைத்தொடர்ந்து, விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு, விநாயகர் சிலைகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கரூர் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.
இந்நிகழ்வின் போது, தமிழ்நாடு சிவசேனா கட்சியின் மாநில செயலாளர் குரு ஐயப்பன், ஈடிவி பாரத்திற்கு அளித்த பேட்டியில், "சில பெரியார் இயக்கங்கள், கடவுள் மறுப்பாளர்கள் தூண்டுதலின் பேரில், விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு இடையூறு செய்யும் வகையில் புகார் அளிக்கப்பட்டு, புகாரின் பேரில் சுற்றுச்சூழல் அதிகாரிகள் விநாயகர் திருமேனி தயாரிக்கும் இடத்தை சீல் வைத்துள்ளனர்.