தமிழ்நாடு

tamil nadu

தேசிய சிலம்ப போட்டியில் தங்கம் வென்று அசத்தல்; வீரர்கள் அரசுக்கு வைக்கும் கோரிக்கை!

By

Published : Feb 3, 2023, 11:27 AM IST

ஹரியானா மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பாட்ட போட்டியில் தங்கம் வென்ற மாணவர்கள் கரூர் திரும்பினர். அங்கு ரயில் நிலையத்தில் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தேசிய சிலம்ப போட்டியில் தங்கத்தை தட்டி தூக்கிய வெற்றி தமிழ் மகன்கள்
தேசிய சிலம்ப போட்டியில் தங்கத்தை தட்டி தூக்கிய வெற்றி தமிழ் மகன்கள்

தேசிய சிலம்ப போட்டியில் தங்கத்தை தட்டி தூக்கிய வெற்றி தமிழ் மகன்கள்

கரூர்:யூத் கேம்ஸ் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா (Youth Games Federation of India) சார்பில் ஹரியானா மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பாட்ட போட்டியில், தமிழ்நாடு அணியில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்.விக்னேஸ்வர், ஏ.நவலடி ஆர்.விமல், சி.பிரனேஷ்வரன், பி.குமரேசன் ஆக்கிய ஐந்து மாணவர்கள், தேசிய அளவில் முதல் இடத்தை பிடித்து வெற்றி பெற்றுள்ளனர்.

இந்நிலையில் போட்டி முடிந்து தங்க பதக்கங்கள் மற்றும் கோப்பையுடன் கரூர் திரும்பிய வெற்றி மகன்களுக்கு, கரூர் ரயில் நிலையத்தில் மாலை அணிவித்தும், ஆரத்தி எடுத்தும் உற்சாகமாக வரவேற்ப்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் பாரதம் மர்சியல் ஆர்ட்ஸ் சிலம்பம் அகாடமி பயிற்சியாளர்கள் எஸ்.கிருஷ்ணராஜ், கே.சௌந்தரராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

இது குறித்து பாரதம் மார்சியல் ஆர்ட்ஸ் சிலம்பும் அகாடமி நிறுவனர் மற்றும் சிலம்பாட்ட பயிற்சியாளர் கிருஷ்ணராஜ் கூறுகையில், “தமிழக அணியின் சார்பில் தேசிய அளவில் நடைபெற்ற சிலம்பாட்ட போட்டியில் 108 பேர் கலந்து கொண்டனர். இதில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பை தமிழ்நாடு அணி பெற்றது. கரூர் மாவட்டத்தை சேர்ந்த ஐந்து மாணவர்கள் முதலிடம் பிடித்தனர்.

ஏப்ரல் மாதம் இறுதியில், நேபாளத்தில் நடைபெறும் சர்வதேச அளவிலான சிலம்பாட்ட போட்டியில், கரூர் சேர்ந்த ஐந்து மாணவர்கள் கலந்துகொள்ளத் தகுதி பெற்றுள்ளனர். மேலும் மத்திய அரசு பணியில் சேர்வதற்கான படிவம் மற்றும் 2 சான்றிதழும் தற்பொழுது முதலிடம் பிடித்த மாணவர்களுக்குக் கிடைத்துள்ளது” என தெரிவித்தார்.

சிலம்பாட்ட பயிற்சி மையத்தின் தலைவர் மற்றும் பயிற்சியாளருமான கிருஷ்ணராஜ் கூறுகையில், “நான் எனது தந்தையிடம் சிலம்பம் கற்றுக் கொண்டு, ஏழை எளிய மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்து வந்தேன். எனது மாணவர்கள் மாவட்ட மற்றும் மாநில தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றுத் திரும்பி உள்ளது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது.

தமிழக அரசுப் பணியில் மூன்று சதவீத இட ஒதுக்கீடும், சீருடை பணியாளர் தேர்வு ஆணையத்தில் மூலம் 10 சதவீத இட ஒதுக்கீடும் வழங்கப்பட்டுள்ளது. சிறப்புக் கலையை அழியாமல் காப்பதற்கு அரசு முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் சிலம்பாட்ட கலைஞர்களுக்கு ஊக்கமளிப்பதாக இருக்கிறது” என்று கூறினார்.

இதனைத்தொடர்ந்து போட்டியில் வெற்றிபெற்ற மாணவர் விக்னேஷ்வர் கூறுகையில், “தேசிய அளவில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றது மகிழ்ச்சியாக உள்ளது. பயிற்சியாளர்களின் ஒத்துழைப்பால் தான் இந்த வெற்றி சாத்தியமானது. நேபாளத்தில் நடைபெறும் உலக சிலம்பாட்டப் போட்டியில் கலந்துகொள்வதற்குத் தேவையான உதவிகளைத் தமிழக அரசு வழங்க வேண்டும்” என கோரிக்கை விடுத்தார்.

இதையும் படிங்க: ஆசிரியர் தகுதித் தேர்வு 2ஆம் தாள் இன்று தொடக்கம்

ABOUT THE AUTHOR

...view details