தமிழ்நாடு

tamil nadu

பான்பராக் விவகாரம்: செந்தில்பாலாஜி தலைமையில் திமுகவில் இணைந்த அதிமுக கவுன்சிலர்!

By

Published : Nov 20, 2021, 2:20 PM IST

aiadmk councillor joins dmk, karur aiadmk councillor alamelu, minister senthil balaji, aiadmk councillor alamelu, dmk karur, karur dmk, கரூர் திமுக, திமுக கரூர், கரூர் திமுக செய்திகள், திமுகவில் இணைந்த அதிமுக கவுன்சிலர், அமைச்சர் செந்தில்பாலாஜி, அதிமுக கவுன்சிலர் அலமேலு

கரூர் மாவட்ட அரசியலில் திடீர் திருப்பமாக அதிமுக மாவட்ட கவுன்சிலர், திமுகவில் இணைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர்: மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர், துணைத் தலைவர் பதவிகளைத் தன்வசம் வைத்திருந்த அதிமுக, சட்டப்பேரவைப் பொதுத்தேர்தலின்போது அதிமுக மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் முத்துக்குமார், கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டதால், தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு திமுக வேட்பாளரிடம் வெற்றி வாய்ப்பை பறிகொடுத்தார்.

ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் கண்ணையனை எதிர்த்து முத்துக்குமார் மீண்டும் போட்டியிட்டார். தேர்தலில் வெற்றிபெற்று, மீண்டும் மாவட்டத் துணைத் தலைவர் பதவியைப் பெற்றுவிட அதிமுக சார்பில் முத்துக்குமார் தீவிர பணியாற்றினார்.

ஆனால், திமுக வேட்பாளருக்கு ஆதரவாக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தீவிர பரப்புரை செய்து, வியூகங்கள் வகுத்ததன் விளைவாக, அதிமுக வசமிருந்த எட்டாவது மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் பதவியை திமுக 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தன்வசப்படுத்தியது.

செந்தில்பாலாஜி

இதன் பின்னர், மாவட்ட ஊராட்சிக் குழுத் துணைத்தலைவர் பதவிக்கு மறைமுகத் தேர்தல் நடைபெற்றபோது, தேர்தல் அலுவலர் மந்திராசலம் முன்னறிவிப்பின்றி தேர்தலை ஒத்திவைத்தார். இதனையறிந்து, அங்கு வந்த அதிமுக மாவட்டச் செயலாளரும், போக்குவரத்துத் துறை முன்னாள்அமைச்சருமான எம்.ஆர். விஜயபாஸ்கர், அவரது ஆதரவாளர்கள், தேர்தல் அலுவலரின் காரை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, தேர்தல் அலுவலரின் புகாரின்பேரில் எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் மீது தாந்தோன்றிமலை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில், அதிமுகவைச் சேர்ந்த மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் முன்பிணை பெற்றனர்.

இந்நிலையில் நவம்பர் 8ஆம் தேதி, கரூர் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் அலமேலுவின் கணவர் மனோகரன் பான்பராக், குட்கா புகையிலைப் பொருள்களைப் பதுக்கி இருந்ததாகக் கைதுசெய்யப்பட்டார்.

குளித்தலை கிளைச் சிறையில் இருந்து நிபந்தனை பிணையில் விடுவிக்கப்பட்ட மனோகரனை, நேற்று அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்திருந்தார்.

எம்.ஆர். விஜயபாஸ்கர்

இந்நிலையில், கரூர் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் அலமேலு, அவரது கணவர் அதிமுகவிலிருந்து விலகி செந்தில்பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

கரூர் மாவட்ட ஊராட்சிக் குழுவில் மொத்தம் உள்ள 12 இடங்களில் திமுகவின் பலம் அதிகரித்துள்ளதால் அடுத்து அறிவிக்கப்பட உள்ள மாவட்ட ஊராட்சிக் குழுத் துணைத் தலைவர் பதவியை திமுக கைப்பற்றும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் அலமேலு, திமுகவில் இணைந்த சம்பவம் கரூர் அரசியல் வட்டாரத்தில் மிகுந்த பரபரப்பையும் திருப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:கரூரில் பள்ளி மாணவி தற்கொலை: பாலியல் தொல்லையால் எடுத்த விபரீத முடிவு!

ABOUT THE AUTHOR

...view details