தமிழ்நாடு

tamil nadu

"பட்டா இருந்தும் ஒரு பயனுமில்லை" வீட்டுமனை கேட்கும் ஆதிதிராவிடர் மக்கள் !

By

Published : Jul 4, 2023, 12:07 PM IST

Updated : Jul 4, 2023, 2:46 PM IST

ஆதிதிராவிடர் மக்களுக்கு முதலமைச்சர் வழங்கிய வீட்டுமனை பட்டா பயனற்றதாக உள்ளது என குற்றம் சாட்டியுள்ளனர். பட்டாவில் உள்ள நிலம் ஆக்கிரமிப்பில் இருப்பதால் குடியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.

adi dravidar
adi dravidar

அரசு வழங்கிய வீட்டுமனையில் குடியேற முடியாமல் தவிக்கும் ஆதிதிராவிடர் மக்கள்!

கரூர்: கரூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 02.07.2022 திருமாநிலையூர் பகுதியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கரூர் மாவட்டத்தில் பல்வேறு துறைகளின்கீழ் ரூபாய் 500.83 கோடி மதிப்பில் 80,750 பயனாளிகளுக்குப் பல்வேறு துறைகளின் கீழ் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி ஏற்பாட்டில் பிரமாண்டமாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் வீடில்லாத ஆதிதிராவிடர் மக்களுக்கு இணைய வழி வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டன.

தமிழக முதலமைச்சரால் வழங்கப்பட்ட இணைய வழி வீட்டுமனைப் பட்டாக்களை அளவீடு செய்து வழங்கக்கோரி, வருவாய் துறைக்கு பயனாளிகள் சார்பில் மனு அளிக்கப்பட்டும் நிலத்தை அளவீடு செய்து தராமல் அதிகாரிகள் காலதாமதம் செய்து வந்தது தற்பொழுது புகாராக கரூர் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டுள்ளதால் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இது தொடர்பாக கரூர் மாவட்ட ஆட்சியரிடம் ஜூன் 3ம் தேதி "என் நண்பன்" அறக்கட்டளை சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அந்த அமைப்பின் நிறுவனர் பொன்.முத்துக்குமார் ஈடிவி பாரத்துக்கு அளித்த பேட்டியில், "கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், பஞ்சமாதேவி கிராமத்தில் தமிழக முதலமைச்சரால் வீடு இல்லாத ஆதிதிராவிடர் மக்களுக்கு வழங்கப்பட்ட இணைய வழி வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்ட இடத்தில் பயனாளிகள் நில அளவீடு செய்து வழங்கக்கோரி, முறையான மனு அளித்து, அதற்குரிய தொகையை அரசுக் கணக்கில் செலுத்தியுள்ளனர்.

கடந்த ஓராண்டாக ஆத்தூர் கிராமம் துண்டுபெருமாள்பாளையம் பகுதியைச் சேர்ந்த ராமசாமி மனைவி ரேவதி, பஞ்சமாதேவி பகுதியைச் சேர்ந்த சந்திரன் மனைவி மல்லிகா ஆகியோர் நில அளவீடு செய்து வழங்கக்கோரி மண்மங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தும் இதுவரை அவ்விடத்திற்குச் சென்று அதிகாரிகள், பார்வையிட்டு நில அளவீடு செய்து வழங்கவில்லை.

இந்த நிலையில், கடந்த மாதம் அவ்விடத்தில் அரசு சார்பில் ஏற்கனவே இலவச வீட்டுமனைப் பட்டா பெற்று, அந்த இடத்தில் குடியேறாத காரணத்தினால், அரசு தரப்பில் வீட்டுமனைப் பட்டா ரத்து செய்யப்பட்டுள்ளது. அந்த நபர் அரசு விதிமுறைகளை மீறி தனது நிலத்தை 4 லட்சம் ரூபாய்க்கு மூன்றாவது நபர் ஒருவருக்கு விற்பனை செய்துள்ளார். அவர், தற்போது தமிழக முதலமைச்சர் வழங்கிய வீட்டுமனைப் பட்டா நிலத்தில் திடீரென ஆக்கிரமிப்பு செய்து கட்டடப் பணிகளை துவங்கியுள்ளார்.

இதனால் வீடில்லாத ஆதி திராவிடர் மக்கள் பெற்ற வீட்டுமனைப் பட்டாவை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து திடீர் ஆக்கிரமிப்பை அகற்றித் தர வேண்டும் என கரூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட ரேவதி கூறுகையில், "வாடகை வீட்டில் குடியிருந்து வருவதால், அரசின் இலவச வீட்டு மனைப் பட்டா கோரி மனு அளித்து காத்திருந்த நிலையில், தமிழக முதலமைச்சர் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கினார். ஆனால், அந்த இடத்தில் இப்பொழுது வசிக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். நிலத்தை அபகரித்துக் கொண்டு அச்சுறுத்தும் நபர்கள் மீது புகார் அளிக்க காவல் நிலையம் சென்றால், அவர்கள் வருவாய்த் துறையிடம் சென்று முறையிடுமாறு கூறுகின்றனர். வருவாய்த் துறையிடம் சென்று புகார் அளித்தால், காவல்துறையிடம் செல்லுமாறு தங்களை அதிகாரிகள் அலைக்கழிப்பு செய்கின்றனர்" எனக் கூறினார்.

மேலும், தமிழக முதலமைச்சர் வழங்கிய அரசு வீட்டு மனைப் பட்டா இடத்தில் ஆதிதிராவிடர் மக்கள் குடியேற முடியாமல் அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால், நிலத்தை இழக்கும் நிலை குறித்து மனு அளித்து விட்டு, பாதிக்கப்பட்டவர்கள் கண்ணீருடன் திரும்பிச் சென்றனர்.

வருவாய்த்துறை அதிகாரிகள், முதலமைச்சர் வழங்கிய வீட்டுமனைப் பட்டா ஆகியவற்றை மீட்டு பயனாளிகளுக்கு வழங்குவார்களா என்பது இனிவரும் நாட்களிலே தெரியவரும். மேலும், தமிழக தலைமைச்செயலாளரிடம் இந்த விவகாரத்தைக் கொண்டு செல்ல இருப்பதாக என் நண்பன் அறக்கட்டளை பொன்.முத்துக்குமார் தெரிவித்தார்.

இதையும் படிங்க:கரூரில் மருத்துவக்கழிவுகளால் அவதியுறும் மக்கள்.. நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி?

Last Updated :Jul 4, 2023, 2:46 PM IST

ABOUT THE AUTHOR

...view details