ETV Bharat / state

கரூரில் மருத்துவக்கழிவுகளால் அவதியுறும் மக்கள்.. நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி?

author img

By

Published : Jul 3, 2023, 10:33 PM IST

கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து ஈடிவி பாரத் செய்தியாளர் சேகரித்த நேரடி கள ஆய்வு குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம்..

Etv Bharat
Etv Bharat

குடியிருப்பு அருகே கொட்டப்படும் மருத்துவக் கழிவுகள்

கரூர்: காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே மருத்துவக் கழிவுகளை அரசு பள்ளியும் குடியிருப்பு பகுதியும் அமைந்துள்ள பகுதியில் சிலர் கொட்டிச் சென்றுள்ளனர். இதனைக் கண்ட குடியிருப்பு பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் இதேபோல், காந்திகிராமம் அரசு நடுநிலைப்பள்ளிக்குச் செல்லும் வழியில் சாலை ஓரமாக தனியார் மருத்துவமனையைச் சேர்ந்த ஊழியர்கள் மருத்துவக் கழிவுகளை கொட்டிச் சென்றுள்ளனர். இதனைக் கண்ட பள்ளி மாணவர்கள் சிலர், ஆபத்தை உணராமல் அதனை எடுத்துச் சென்று விளையாடி வருகின்றனர்.

இது குறித்து கரூர் காந்திகிராமம் சுற்றியுள்ள குடியிருப்பு வாசிகளின் சங்க செயலாளர் சதீஷ்குமார் ஈடிவி பாரத் செய்திக்கு பிரத்யோகப் பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறுகையில், “மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்ட நாள் முதல் குடியிருப்பு வாசிகள் சார்பில் சுகாதாரமான சூழலை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். மருத்துவக் கல்லூரி தொடங்கிய ஓராண்டில் கரோனா பெருந்தொற்று உயிர்காக்கும் சிகிச்சைக்கு குடியிருப்பு வாசிகள் சார்பில் அனைவரும் ரத்த தானம் வழங்கினோம்.

தொற்று பரவும் அபாயத்தில் மக்கள்: மருத்துவக் கல்லூரி தங்கள் பகுதி அருகே உள்ளதை வரவேற்கும் அதே வேளையில், மருத்துவக் கல்லூரியில் நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் மருத்துவக் கழிவுகள் உள்பட சேமிக்கப்படும் கிடங்கு அருகாமையில் உள்ள குடியிருப்புகள் கவனத்தைக் கொண்டு துர்நாற்றம் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்படும் முன் கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும் என தொடர்ந்து அரசுக்கும் மருத்துவக் கல்லூரி நிர்வாகத்திற்கும் வலியுறுத்தி வருகிறோம்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மருத்துவக் கல்லூரியில் டெல்லியில் இருந்து அதிகாரிகள் வந்து ஆய்வு நடத்துவதாக கூறியதை எடுத்து சுற்றுப்புற வளாகம் மிக தூய்மையாக வைக்கப்பட்டது. அதன் பின் மீண்டும் சுகாதார கேடு நிலவி வருகிறது. மருத்துவக் கல்லூரியில் பணியாற்றும் சில மருத்துவர்கள், மருத்துவக் கல்லூரி அருகாமையிலே சொந்தமாக மருத்துவமனையும், தனியார் சிகிச்சை மையம் ஆகியவற்றை அமைத்துள்ளனர். அவர்கள் மாநகராட்சி சார்பில் பெறப்படும் மருத்துவக் கழிவுகள் பெறும் சுகாதாரப் பணியாளர்களிடம் முறையாக ஒப்படைப்பது இல்லை.

குடியிருப்பு பகுதியில் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகள்: விடுமுறை நாட்களில் மருத்துவக் கழிவுகளை காலியாக உள்ள குடியிருப்பு பகுதி அருகே கொட்டி விட்டுச் செல்கின்றனர். இவற்றில் பெரும்பாலும் மருந்து மற்றும் ஊசி ஆகியவை உள்ளன. இதனால் குழந்தைகள் அதனை விளையாட்டாக எடுத்து பயன்படுத்தும் அபாயகரமான சூழல் உள்ளது. இன்று காலை கூட இதே போன்று மருத்துவக் கழிவுகளை அரசு மருத்துவக் கல்லூரிக்குச் செல்லும் பாதை அமைந்துள்ள அரசு நடுநிலைப்பள்ளி மிக அருகே தனியார் மருத்துவமனை கழிவுகளை கொட்டி விட்டுச் சென்றுவிட்டனர்.

கரூர் மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் மருத்துவக் கழிவுகளை முறைப்படுத்தி பெற்றுக்கொள்ள வேண்டும் அப்பொழுதுதான் தனியார் மருத்துவமனை ஊழியர்கள், பொதுமக்கள் குடியிருப்பு பகுதி அருகே உள்ள காலி நிலங்களில் தூக்கி எறியும் நிலை தவிர்க்கப்படும்” என தெரிவித்தார். இந்த நிலை நீடித்தால் 40 ஆண்டுகளுக்கு மேலாக நிலையாக குடியிருந்து வரும் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சுற்றியுள்ள குடியிருப்பு வாசிகள் ஊரையே காலி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மாநகராட்சி சுகாதார அலுவலரின் பதில் என்ன?: இதனிடையே அப்பகுதியில் மருத்துவக் கழிவுகளை கொட்டிச் சென்ற மருத்துவமனை ஊழியர்கள் அதனை வெறுங்கையால் அள்ளி அப்புறப்படுத்த முயற்சியில் ஈடுபட்டனர். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மருத்துவக் கழிவுகள் முறையாக மாநகராட்சி பெற்று அதனை அழிக்க வேண்டும். ஆனால், கரூர் மாநகராட்சி சார்பில் மருத்துவக் கழிவுகளைப் பெற மறுக்கப்பட்டதால் அங்கு கொட்டப்பட்டதாக கூறப்படுவது குறித்து கரூர் மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகளின் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என ஈடிவி பாரத் செய்தியாளர் கண்ணன் கரூர் மாநகராட்சி சுகாதார அலுவலரிடம் கேட்டுக் கொண்டார்.

அதற்கு, இந்த மருத்துவக் கழிவுகள் குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார். வீட்டின் அருகேயே மருத்துவக் கல்லூரி மருத்துவ சேவை கிடைக்கப் போகிறது என்று வரவேற்று காத்திருந்த காந்திகிராமம் மக்களுக்கு, மருத்துவக் கழிவுகளால் ஏற்பட்டுள்ள அவதியை கரூர் மாவட்ட ஆட்சியராக உள்ள மருத்துவர் பிரபுசங்கர் தீர்த்து வைக்க வேண்டும் என்பதே அப்பகுதி குடியிருப்பு வாசிகளின் கோரிக்கையாக உள்ளது.

இதையும் படிங்க: ஆபத்தை அறியாமல் அருவியில் ஆட்டம் போடும் இளைஞர்கள் - சமூக ஆர்வலர்கள் வருத்தம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.