தமிழ்நாடு

tamil nadu

சாதி மறுப்பு திருமணம் செய்த மகளை கடத்திய தந்தை உட்பட 9 பேர் கைது

By

Published : Apr 30, 2022, 9:55 PM IST

சாதி மறுப்பு திருமணம்

கரூர் அருகே சாதிமறுப்பு திருமணம் செய்த இளம் ஜோடிகளை காரில் கடத்திய சம்பவம் தொடர்பாக பெண்ணின் தந்தை உள்ளிட்ட 9பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கரூர் மாவட்டம் வெள்ளியணை அருகே ஜல்லிபட்டியைச் சேர்ந்தவர் பால்வண்டி ஓட்டுநர் கார்த்திக்(22). இவர் பட்டியல் இன அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவர். ஆலமரத்துப்பட்டியைச் சேர்ந்த மற்றொரு சமூகத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரின் மகள் கோமதி(19). இவர் கரூரிலுள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாமாண்டு படித்து வருகிறார். இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தநிலையில் கடந்த ஏப்.26ஆம் தேதி இருவரும் வீட்டுக்குத் தெரியாமல் சென்று திருமணம் செய்து கொண்டனர்.

கலப்பு திருமணமும் கடத்தப்பட்ட புதுமண ஜோடிகளும்:இருவரும் வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால் திருமணம் செய்து கொண்ட இளம் ஜோடிகள் வெள்ளியணை காவல்நிலையத்தில் கடந்த 27ஆம் தேதி தஞ்சமடைந்தனர். இருதரப்பு பெற்றோர்களையும் அழைத்து பேசியபோது, பெண்ணின் பெற்றோர் மகளின் திருமணத்தை ஏற்க மறுத்தால் கார்த்திக் குடும்பத்துடன் காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். இதனிடையே ஏப் 28.ம் தேதி கார்த்திக்கின் உறவினர் வாங்கலாயி என்பவரின் ஏமூர்புதூரில் விருந்துக்கு சென்றவர்கள் அங்கேயே இரவு தங்கி உள்ளனர். நள்ளிரவில் இரண்டு கார்களில் வந்தவர்கள் கார்த்திக், கோமதி இருவரையும் வாயைப் பொத்தி தூக்கிக் கொண்டு, கடத்தி கொண்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.

மீட்கப்பட்ட கலப்பு திருமண ஜோடி; 9பேர் கைது:கடத்தப்பட்ட சில மணி நேரத்தில் வெள்ளியணை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, போலீசார் நடத்திய விசாரணையில் சாதி மறுப்பு திருமணத்தை ஏற்காத கோமதியின் தந்தை கிருஷ்ணசாமி அடியாட்கள் உதவியுடன் மணமக்களை கடத்திச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து கரூர் மாவட்ட குற்றப்பிரிவு ஏடிஎஸ்பி கீதாஞ்சலி தலைமையில், கரூர் நகர துணை காவல் கண்காணிப்பாளர் தேவராஜ் தனிப்படை போலீசார் கடத்தலில் ஈடுபட்டதாக கோமதியின் தந்தை கிருஷ்ணமூர்த்தி(45), தாய்மாமன் கோவிந்தராஜ்(36), அர்ஜுனன்(29), முருகேசன்(44), சண்முகம்(35), செல்வம் (எ) குப்புசாமி(46), பாலசுப்பிரமணி(36) மற்றும் 17 வயது சிறுவன் உள்ளிட்ட என 9 பேரை போலீசார் கைது செய்தனர்.

காவல்துறை பாதுகாப்பு தரக் கோரிக்கை:தொடர்ந்து வெள்ளியணை பகுதியில் பதற்றம் ஏற்பட்டதால் பசுபதிபாளையம் காவல் நிலையத்திற்கு அவர்களை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்ட பின்னர், கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தனது மகளின் காதலையும் கலப்பு திருமணத்தையும் ஏற்க மறுத்த தந்தை, மகளையும் அவரது காதல் கணவர் கார்த்திக்கையும் ஆட்கள் வைத்து கடத்திச் சென்று மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவேண்டும் என்று காவல்துறையிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: காப்பாத்துங்க...ப்ளீஸ் - சாலையில் கதறி அழுத காதலர்கள்!

ABOUT THE AUTHOR

...view details