தமிழ்நாடு

tamil nadu

இறந்தும் 6 பேருக்கு மறுவாழ்வு அளித்த ஆண் செவிலியர்! அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 27, 2023, 4:28 PM IST

மூளைச்சாவு அடைந்த கன்னியாகுமரி இளைஞரின் உடல் உறுப்புகள் 6 பேருக்கு தானம் அளிக்கப்பட்ட நிலையில், அவரது உடலுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

Government honors Kanyakumari youngster body for organ donation
6 பேருக்கு மறுவாழ்வு அளித்த கன்னியாகுமரி இளைஞர் உடலுக்கு அரசு சார்பில் மரியாதை

6 பேருக்கு மறுவாழ்வு அளித்த கன்னியாகுமரி இளைஞர் உடலுக்கு அரசு சார்பில் மரியாதை

கன்னியாகுமரி: புதுக்கடை கீழ்குளம் அருகே உள்ள சரல்விளை பகுதியை சேர்ந்தவர் 36 வயதான செல்வின் சேகர். இவர் மருத்துவம் சார்ந்த முதுநிலை பட்டப்படிப்பு படித்து உள்ளார். மேலும் இவர் கருங்கல், புத்தன் துறை ஆகிய பகுதிகளில் மருந்தகம் நடத்தி வந்தார். செல்வின், கீதா என்ற பெண்ணை காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

செல்வின் சேகர் சிறு வயது முதல் ஏழை எளிய மற்றும் ஆதரவு இல்லாதவர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வந்தார். அத்துடன் ரோடுகளில் சுற்றித்திரியும் முதியவர்களுக்கு உணவுகள் அளித்தும், அவர்களை காப்பகத்தில் சேர்த்து அவர்களுக்கான மாத செலவு கட்டணத்தையும் வழங்கியும் வந்து உள்ளார். அத்துடன் ஏழை குழந்தைகளை சிலரை படிக்க வைத்து ஒரு சமூக சேவகராக திகழ்ந்தார்.

இப்படி எண்ணற்ற உதவிகளை செய்து வந்த செல்வின் சேகர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்தபோது திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனே அவரை உறவினர்கள் மீட்டு நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆனாலும் அவரது உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அப்போது அவரது மூளையில் உள்ள ரத்த நாளங்களில் அடைப்பு இருப்பது தெரிய வந்தது.

அவரை காப்பாற்றும் நடவடிக்கையில் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஒரு கட்டத்தில் உடல் நிலை மிகவும் மோசமாகி செல்வின் கோமா நிலைக்கு சென்றார். பின்னர் அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. செல்வின் உயிருடன் இருக்கும் போதே தான் இறந்த பின்பு தனது உடல் உறுப்புகளை தானம் செய்ய வேண்டும் என மனைவியிடம் கூறியிருந்தார்.

அதன்படி உறுப்புகளை தானம் செய்ய அவரது உறவினர்கள் முன் வந்து மருத்துவமனை நிர்வாகத்திடம் கூறி உள்ளனர். பின்னர் செல்வினின் கண்கள், கல்லீரல், இதயம், நுரையீரல் உள்ளிட்ட 6 உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. அவரது இதயம் கொல்லத்தை சேர்ந்த ஹரி நாராயணன் என்ற 14 வயது சிறுவனுக்கு பொருத்த முடிவு செய்யப்பட்டது.

இதற்காக இதயத்தை திருவனந்தபுரத்தில் இருந்து கொல்லத்துக்கு ஹெலிகாப்டர் மூலம் கொண்டு சென்று, அந்த சிறுவனுக்கு பொருத்தப்பட்டது. மேலும் 6 உறுப்புகளும் 6 பேருக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் பொருத்தப்பட்டது. இந்த நிலையில் நேற்று அவரது உடல் சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டம் சரல்விளை பகுதிக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்டது.

பின்னர் அவரது வீட்டில் செல்வினின் உடல் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டது. மேலும், மாவட்ட நிர்வாகம் சார்பில் பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக், ஆசாரிபள்ளம் மருத்துவமனை டீன் பிரின்ஸ் பயஸ் மற்றும் தாசில்தார்கள், கிராம நிர்வாகிகள் உள்பட 5 அரசு அதிகாரிகள் நேரில் சென்று செல்வின் உடலுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தினர்.

மேலும், செல்வினின் உடலுக்கு கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் விஜய்வசந்த், கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் அஞ்சலி செலுத்தினர். மேலும் செல்வின் சேகர் உடலுக்கு உறவினர்கள், ஊர்மக்கள் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பலர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல் கீழ்குளம் பகுதியில் உள்ள குடும்ப கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

இதையும் படிங்க: மறைவுக்கு பிறகு 5 பேருக்கு மறுவாழ்வு கொடுத்த இளைஞர்.. தேனி நெகிழ்ச்சி சம்பவம்!

ABOUT THE AUTHOR

...view details