தமிழ்நாடு

tamil nadu

காஞ்சியில் சிசிடிவி கேமரா பொருத்தும் பணி தீவிரம்: எஸ்பி தகவல்

By

Published : Jul 31, 2021, 7:20 PM IST

கடந்த ஒரு மாத காலத்தில் நடந்த திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் 19 பேர் கைதுசெய்யப்பட்டு, அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் பணிகள் நடைபெற்றுவருவதாக காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

காஞ்சிபுரம்:கடந்த மாதம் 7ஆம் தேதி காஞ்சிபுரம் காவல் கண்காணிப்பாளராகப் பொறுப்பேற்றுக்கொண்ட எம். சுதாகர் மாவட்டத்தில் குற்றச் சம்பவங்களைக் குறைக்க பல்வேறு நடவடக்கைகளில் ஈடுபட்டுவருகிறார்.

காஞ்சிபுரம் சரக டிஐடி சத்யப்பிரியா அறிவுறுத்தலின் பெயரில், குற்றச் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது தீவிர நடவடிக்கை எடுக்க காவல் கண்காணிப்பாளர் காவல் துறையினருக்குப் பல்வேறு ஆலோசனைகளை வழங்கிவருகிறார்.

அதன்படி மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலத்தில் நடந்த குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு, குற்றவாளிகளை காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

அப்போது காவல் கண்காணிப்பாளர் எம். சுதாகர் பேசுகையில், "கடந்த ஒரு மாதத்தில் மட்டும் திருட்டு, கொள்ளை வழக்குகளில் சம்பந்தப்பட்ட நபர்கள் அடையாளம் கண்டறியப்பட்டு, அவர்களில் 19 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து 24 குற்ற வழக்குகளில், சுமார் 55 சவரன் தங்க நகைகள், 2.2 கிலோ வெள்ளி பொருள்கள், 10 இருசக்கர வாகனங்கள், ஒரு ஆடி கார் என ரூ.1.18 கோடி மதிப்புள்ள பொருள்கள் மீட்கப்பட்டுள்ளன. அவற்றை உரிய நபர்களிடம் ஒப்படைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செய்தியாளர்கள் சந்திப்பு

பல்வேறு குற்ற வழக்குகள் சம்பந்தப்பட்ட 109 ரவுடிகள் கைதுசெய்யப்பட்டும் 35 ரவுடிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் திருந்தி வாழ நினைக்கும் ரவுடிகளுக்கு வாய்ப்பு அளிக்கும்பொருட்டும், 246 ரவுடிகளை எச்சரித்து வருவாய் கோட்டாட்சியர் முன்பு முன்னிறுத்தி அவர்கள் ஓராண்டு நன்னடத்தை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்டம் முழுவதும் சுமார் மூன்றாயிரத்து 500 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கடந்த ஒரு வார காலத்தில் மட்டும் 50-க்கும் மேற்பட்ட கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் புதிதாக சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

இதன்மூலம் மாவட்டத்தில் குற்றச் சம்பவங்கள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு குறைக்கப்படும்" என்றார்.

இந்தச் சந்திப்பின் போது, காஞ்சிபுரம் துணை காவல் கண்காணிப்பாளர் முருகன், ஸ்ரீபெரும்புதூர் உதவி காவல்கண்காணிப்பாளர் மணிகண்டன், பல்வேறு காவல் நிலைய ஆய்வாளர்கள் உடனிருந்தனர்.

இதையும் படிங்க:உத்திரமேரூர் அருகே திமுக பிரமுகர் கொலை: 6 பேரிடம் விசாரணை

ABOUT THE AUTHOR

...view details