ETV Bharat / state

உத்திரமேரூர் அருகே திமுக பிரமுகர் கொலை: 6 பேரிடம் விசாரணை

author img

By

Published : Jul 31, 2021, 4:58 PM IST

உத்திரமேரூர் அருகே திமுகவைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சண்முகம் கொலைசெய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக காவல் துறையினர் ஆறு பேரிடம் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

சண்முகம்
சண்முகம்

காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அருகேள்ள மதூர் கிராமத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவர் திமுகவைச் சேர்ந்த சண்முகம். இவருக்கும், இதே பகுதியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாகப் பிரச்சினை இருந்துவந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் சண்முகம் நேற்றிரவு (ஜூலை 30) தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் அவரை இரும்பு கம்பியால் தாக்கி, அரிவாளால் வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர்.

பின்னர் இது குறித்து தகவலறிந்து விரைந்த காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர், சாலவாக்கம் காவல் துறையினர் உயிரிழந்து கிடந்த சண்முகத்தின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

தொடர்ந்து இக்கொலை சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. முதற்கட்டமாக இது தொடர்பாக அதே ஊரைச் சேர்ந்த பெட்ரோல் சேமிப்பு நிலைய உரிமையாளர் முத்து, அவரின் தம்பி கண்ணன், மகன் நித்யா, மதூர் காலனியைச் சேர்ந்த இந்துசேகரன், அவரது தம்பி ராஜசேகர் உள்பட ஆறு பேரைப் பிடித்து சாலவாக்கம் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

உள்ளாட்சித் தேர்தலை குறிவைத்து சண்முகத்தை, அதிமுக நிர்வாகி படுகொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: லாட்டரி சீட்டு விற்பனையில் கைதான திமுக பிரமுகர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.