தமிழ்நாடு

tamil nadu

அத்திவரதர் வைபவத்திற்கு அரசு நிதி ஒதுக்கவில்லை - கோயில் நிர்வாகத்தின் பதிலால் பக்தர்கள் அதிர்ச்சி!

By

Published : Feb 20, 2021, 4:10 PM IST

அத்திவரதர்
அத்திவரதர் ()

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அத்திவரதர் வைபவத்திற்கு 44 கோடி நிதி ஒதுக்கப்பட்டு செலவிடப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருந்த நிலையில், தற்போது அரசு நிதி ஏதும் ஒதுக்கீடு செய்யவில்லை என்ற கோயில் நிர்வாகத்தின் பதிலளால் பக்தர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

உலகப்பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் வைபவம் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்றது. அதையொட்டி அனந்தசரஸ் குளத்தில் இருந்து அத்திவரதர் வெளியே எடுக்கப்பட்டு வசந்த மண்டபத்தில் எழுந்தருளி 48 நாள்கள் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

அத்திவரதர் வைபவத்திற்கு அரசு சார்பில் ஒதுக்கப்பட்ட நிதி, செலவினங்கள், சிறப்பு தரிசன டிக்கெட் மூலம் நிர்வாகத்திற்கு கிடைத்த வருவாய் மற்றும் பக்தர்களின் எண்ணிக்கை குறித்து சென்னையைச் சேர்ந்த காசிமாயன் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல்கள் கேட்டு விண்ணப்பித்திருந்தார்.

இதனடிப்படையில் கோயில் நிர்வாகம் சார்பில் அளிக்கப்பட்ட பதிலில், அத்தி வரதர் வைபவத்திற்கு அரசு சார்பில் நிதி ஏதும் ஒதுக்கப்படவில்லை எனவும், சிறப்பு தரிசனம் ஆன்லைன் டிக்கெட் என மொத்தம் ரூபாய் 3 கோடியே 76 லட்சத்து 83 ஆயிரத்து 800 வருவாய் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், உண்டியல் மூலம் ரூ.10.60 கோடி ரொக்கம் மற்றும் 165.20 கிராம் தங்கமும், 5333.20 கிராம் வெள்ளி ஆகியவை வருவாயாகக் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

அத்திவரதர் வைபவத்திற்கு அரசு சார்பில் ரூபாய் 44 கோடி நிதி ஒதுக்கப்பட்டு செலவிடப்பட்டதாக அன்றைய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா தெரிவித்திருந்தார். ஆனால் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோவில் நிர்வாகம் வழங்கிய தகவலில் அரசு நிதி ஒதுக்கவில்லை என தெரிவித்துள்ளதால் பக்தர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அத்திவரதர் வைபவத்தின் நிர்வாக செலவினங்கள் வெளிப்படைத் தன்மையற்றதாக உள்ளதால் அறநிலையத்துறை ஆணையர் விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாவட்ட நிர்வாகமும், கோவில் நிர்வாகமும் இணைந்து நடத்திய அத்தி வரதர் வைபவத்தில் முன்னுக்கு பின் முரணான வகையில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதால் ஏதேனும் ஊழல் நடைபெற்றுள்ளதா என்ற கேள்வியே எழுகிறது என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: அலைமோதும் பக்தர்கள் கூட்டம்! வெளியே வருகிறார் அத்திவரதர்?

ABOUT THE AUTHOR

...view details