கடலூரிலுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்த போது, ”அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்திருப்பது போன்று தோற்றமளித்தாலும், அவர்கள் பாஜக கொடியையோ, மோடி படத்தையோ தவிர்ப்பதாகவே கூறப்படுகிறது. மோடியைக் காட்டினால் ஓட்டு கிடைக்காது என்பதை அதிமுகவின் தொண்டன் தெரிந்து வைத்திருக்கிறான். ஆனால், எடப்பாடிக்கும், ஓபிஎஸ்க்கும் ஏனோ தெரியவில்லை.
பண பலத்தை நம்பியே அதிமுக கூட்டணி தேர்தல் களத்தில் உள்ளது. ஆனால், தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்படாமல் எதிர்க்கட்சிகளை மிரட்டும் வகையில் சோதனையிடுகிறது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மை குறித்து தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளோம். அதில், யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிவிக்கும் விவிபேட்டில் வரும் காகிதத்தையும், ஓட்டு எண்ணிக்கையின் போது கணக்கிட்டுக் கொள்ள வலியுறுத்தி உள்ளோம். அப்போது தான் வாக்குப்பதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த முடியும்.