கோயம்புத்தூர்: பாபர் மசூதி இடிப்பு தினமான இன்று பல்வேறு இடங்களில் இஸ்லாமிய அமைப்புகள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். அதன் ஒரு பகுதியாக கோவை உக்கடம் பகுதியில் பாபர் மசூதி இடிப்பு தினத்தை ஒட்டி பல்வேறு கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன், விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினர், நாம் தமிழர் கட்சியினர் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
அதே போல் குனியமுத்தூர் பகுதியில் ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக்கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வழிபாட்டு உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கோவை மாவட்டத் தலைவர் பெரோஸ்கான் தலைமை வகித்தார்.