கோயம்புத்தூர்: ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் வரைப்படத்திலேயே இடம் பெறாத கோவை மாவட்டம், தற்போது இந்தியாவில் உள்ள தலை சிறந்த நகரங்களில் ஒன்றாக வளர்ந்து நிற்கிறது. தென் இந்தியாவின் மான்செஸ்ட்டர் என்று அறியப்பட்ட கோவை, கல்வி நகரமாகவும், மருத்துவ நகரமாகவும், தொழில்நகராகவும் திகழ்ந்து வருகிறது.
பல்வேறு தொழில் வளங்களுடன், லட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பை வழங்கி வருகிறது கோவை. உலகின் இரண்டாவது சுவையான குடிநீர் என புகழப்படும் சிறுவாணி அணை, கோவை மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளதால் இங்கு நிலவும் குளுமையான, இதமான சீதோஷ்ன நிலை கோவைக்கு வந்தோரை குளிர வைக்கிறது.
முன்பு கோவன் என்ற பழங்குடியின தலைவன் ஆண்ட பகுதி கோவன் புத்தூர் என அழைக்கப்பட்டது. பின்னர் அது மருவி கோயம்புத்தூர் ஆகியுள்ளது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ரோமானியர்களுடன் வணிகம் நடைபெற்றுள்ளது. அதற்கான சான்றுகள் நொய்யல் நதிக்கரையோரங்களிலும், பாலக்காட்டு கணவாய் வழியாக மேற்கு, கிழக்கு கடற்கரைகளை இணைக்கும் ராஜா கேசரி பெரு வழியிலும் கண்டறியப்பட்டுள்ளன.
கோயம்புத்தூரை சேரர், சோழர், பாண்டியர், விஜய நகர மன்னர்கள், ஹைதர் அலி, திப்பு சுல்தான், பிரிட்டிஷ் என பலர் ஆண்டுள்ளனர். கோட்டை மேடு பகுதியில் இருந்த கோட்டைக்காக திப்பு சுல்தானும், ஆங்கிலேயர்களும் போர் புரிந்ததாக வரலாறு கூறுகிறது. திப்பு சுல்தான் வீழ்ச்சிக்கு பின்னர் 1799இல் கோவை ஆங்கிலேயர் வசமானது.
ஆங்கிலேயர்கள் நிர்வாக வசதிக்காக 1804ஆம் ஆண்டு நவம்பர் 24ஆம் தேதியன்று கோவை நகரை தலைநகரமாக கொண்டு கோயம்புத்தூர் மாவட்டத்தை உருவாக்கினர். இதனைத் தொடர்ந்து 19ஆம் நூற்றாண்டில் கடும் பஞ்சத்திலும், 20ஆம் நூற்றாண்டில் காலரா, பிளேக் ஆகிய தொற்று நோய்களிலும் சிக்கி பல்லாயிரம் மக்களை இழந்தது.