கோயம்புத்தூர்புலியகுளம் பகுதி கிரீன் பீல்டு காலனியைச் சேர்ந்தவர், ராஜேஸ்வரி. இவரது கணவர் இறந்துவிட்ட நிலையில் இவர் மட்டும் தனியாக வசித்து வருகிறார். இவருக்கு ரியல் எஸ்டேட் தொழில் மூலம் சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த வர்ஷினி என்பவர் அறிமுகமாகி உள்ளார். பின்னர் வர்ஷினி அடிக்கடி ராஜேஸ்வரி இல்லத்திற்கு வந்து செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 20ஆம் தேதி ராஜேஸ்வரியின் வீட்டிற்கு வந்த வர்ஷினி, ராஜேஸ்வரி தூங்கிய பின்பு வீட்டிலிருந்த சுமார் 80-100 சவரன் மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகள், இரண்டரை கோடி ரூபாய் பணம் ஆகியவற்றைத் திருடிக் கொண்டு அவருக்கு தெரிந்த அருண்குமார் மற்றும் நவீன்குமார் ஆகியோருடன் தப்பிச்சென்றுள்ளார்.
இதுகுறித்து ராஜேஸ்வரி கோவை ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் புலன்விசாரணை மேற்கொள்ளத் தொடங்கியதை அடுத்து செல்போன் சிக்னல்களை கொண்டு ஆய்வாளர் பிரபாதேவி தலைமையிலான தனிப்படை திருவள்ளூர் மாவட்டம், காட்டூர் கிராமத்திற்குச் சென்று, அங்கு பதுங்கி இருந்த அருண்குமாரை (37) கைது செய்தனர்.