தமிழ்நாடு

tamil nadu

"பெண் காவலர்களுக்கு துப்பாக்கி தேவையில்லை" - காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 11, 2024, 10:56 PM IST

Sandeep Rai Rathore: பெண் காவலர்கள் இரவில் ரோந்து பணி மேற்கொள்ளும் போது பல்வேறு கண்காணிப்பு வழிமுறைகள் உள்ளது என காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார்.

Commissioner Sandeep Rai
காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர்

சென்னை:சென்னை பூக்கடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஐசக் தெருவில் பெண் காவலர்கள் தங்குவதற்காகக் கட்டப்பட்டிருந்த ஓய்வு அறைகளுடன் கூடிய கட்டிடம் நீண்ட நாட்களாகத் திறக்கப்படாமல் இருந்து வந்தது. இந்த தங்கும் விடுதி கடினம் புதுபிக்கப்பட்டு இன்று (ஜன.11) திறக்கப்பட்டது.

இதனை, காவல் ஆணையர் சந்திப் ராய் ரத்தோர் திறந்து வைத்தார். உடன் கூடுதல் ஆணையர் அசரா கார்க் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இது குறித்து, காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் கூறியதாவது "மகளிர் காவலர்கள் ஓய்வு எடுப்பதற்கு 21 அறைகள் உள்ளன. இதில், 57 காவலர்கள் தங்கும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உள்ளூர் காவலர்கள், வெளியூர் காவலர்கள் என அனைவரும் இந்த அறைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். வழக்குகள் தொடர்பாக நீதிமன்றங்களுக்கு வருபவர்களும் இந்த அறைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

அவர்கள் தினமும் ரூபாய் 100 கொடுத்துத் தங்கிக் கொள்ளலாம். சென்னை வடக்கு மாவட்டம் காவல்துறை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இதில் சமையலறை உள்ளிட்ட வசதிகள் அனைத்தும் வசதிகளும் உள்ளது. தேசிய குற்ற ஆவணக் காப்பக தகவல் படி, சென்னை பெருநகர பெண்களுக்குப் பாதுகாப்பான நகரம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டிலும், அதேபோல் பெண்களுக்குப் பாதுகாப்பான நகரமாக இருக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பெண் காவலர்கள் இரவில் ரோந்து பணி மேற்கொள்ளும் போது பல்வேறு கண்காணிப்பு வழிமுறைகள் உள்ளது.

காவல் நிலையத்தில் இருந்து செல்லும் போதும், ரோந்து பணிக்குச் செல்லும் இடங்களில் கையெழுத்திடுவது போன்ற நடவடிக்கைகள் மூலமாகக் காவலர்கள் எங்கெங்கு செல்கிறார்கள் என கண்காணிக்கப் படுகிறார்கள். மேலும், துணை ஆணையர்கள் அவ்வப்போது திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது, கூடுதல் புதிய நடைமுறையாக இணை ஆணையர் மற்றும் கூடுதல் ஆணையர்கள் திடீர் ஆய்வு மேற்கொள்ளவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் காவலர்கள் துப்பாக்கி எடுத்துச் செல்லும் வகையில் சென்னை மாநகரம் இதுவரை இல்லை என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், காணும் பொங்கலுக்கு முன்னிட்டு கடற்கரைகளில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்கள் தங்களின் கடமையை உணர்ந்து பொங்கல் தினத்தைப் பாதுகாப்புடன் கொண்டாட வேண்டும்.

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு காவல்துறையினரை இடமாற்றம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பான பட்டியல் ஜனவரி 31ஆம் தேதி வெளியாகும். போதை ஊசி, மாத்திரைகள் பயன்படுத்துவதைத் தடுக்க சுகாதாரத்துறையினருடன் இணைந்து நடவடிக்கை எடுப்பது பற்றி ஆலோசனை செய்து வருகின்றோம். போதை பயன்பாட்டைத் தவிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

இதையும் படிங்க:தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு போட்டி: காளை மாடு முட்டியதில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details