தமிழ்நாடு

tamil nadu

அரசுப்பள்ளிகளில் கட்டாய மத மாற்றத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரிய மனு - நாளை ஒத்திவைப்பு!

By

Published : May 5, 2022, 3:13 PM IST

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கட்டாய மத மாற்றத்தைத் தடுக்க நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அரசுப்பள்ளிகளில் கட்டாய மத மாற்றத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மனு!
அரசுப்பள்ளிகளில் கட்டாய மத மாற்றத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மனு!

சென்னை: 'தமிழ்நாட்டில் கிறிஸ்துவ மிஷனரிக்கள் மதமாற்றத்தில் ஈடுபடுவதாகவும், அதன் காரணமாக தஞ்சையில் பள்ளி மாணவி லாவண்யா கடந்த ஆண்டு தற்கொலை செய்தது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இந்த ஆண்டும் அரசின் ஆதரவுடன் கிறிஸ்துவ மிஷனரிகள் செயல்படுகின்றன.

கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி அரசு கட்டுப்பாட்டில் உள்ள, கன்னியாகுமரி பள்ளியில் மதமாற்ற விவகாரத்தில் மாணவியை மண்டியிட செய்த விவகாரத்தில், ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையமும் இந்த விவகாரத்தை விசாரணைக்கு எடுத்துள்ளது.

மத ரீதியிலான செயல்பாடுகளில் கல்வி நிறுவனங்களை பயன்படுத்தக்கூடாது என உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் அறிவுறுத்தி இருந்தாலும், மிஷனரிகளுக்கு ஆதரவான அரசு அமையும்போதெல்லாம் இந்துக்களின் உரிமைகள் ஒடுக்கப்படுகிறது.

தஞ்சைப் பள்ளி மாணவி தற்கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபர் ஜாமீன் பெற்று சிறையிலிருந்து வெளியில் வரும்போது, ஆளுங்கட்சி மக்கள் பிரதிநிதி சென்று வரவேற்றதன் மூலம், மிஷனரிகளுக்கு ஆதரவாகவும், கல்வி நிறுவனங்களுக்கு ஆதரவாகவும் அரசு செயல்படுவது நிரூபணமாகியுள்ளது.

மாநில அரசு மத விவகாரங்களில் நடுநிலைமையுடன் செயல்பட வேண்டியது அவசியம் என்றும், கன்னியாகுமரி, திருப்பூர் போன்ற இடங்களில் நடந்த மதமாற்ற நடவடிக்கைளில் சம்பந்தப்பட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கட்டாய மத மாற்றத்தைத் தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கவும், அதற்கான விதிகளை வகுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டுமெனவும்' சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜெகன்நாத் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், எஸ்.ஆனந்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, மனுதாரர் குறிப்பிட்ட திருப்பூர் மற்றும் கன்னியாகுமரி ஆகிய சம்பவங்களைத் தொடர்ந்து எந்த கல்வி நிறுவனத்திலும் கட்டாய மத மாற்றச் சம்பவங்கள் நடந்ததாக எந்தப் புகாரும் தமிழ்நாட்டில் இல்லை எனவும்,

அவ்வாறு புகார் ஏதும் வந்தால் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், எந்தப் பள்ளியில்? எந்த தேதியில்? மதமாற்றம் என்ற விவரங்கள் இல்லாமல் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல எனவும், ஆரம்ப நிலையிலேயே இதை தள்ளுபடி செய்ய வேண்டுமென வலியுறுத்தி வாதிட்டார்

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், மனுதாரர் கோரியபடி வழிகாட்டு விதிமுறைகளை தமிழ்நாடு அரசு ஏன் வகுக்கக்கூடாது? எனவும், அது அரசுக்கு என்ன சிரமம் உள்ளது எனவும் கேள்வி எழுப்பினார். மேலும், குறிப்பிட்ட மதத்தைப் பின்பற்றுவது ஒவ்வொருவரின் உரிமையாக இருந்தாலும், மதமாற்றம் செய்வது என்பது அவர்களின் உரிமை அல்ல எனவும் கூறி, வழக்கை விரிவான வாதத்திற்காக நாளை (மே 06) தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க:மத அடையாளங்களுடன் ஆடைகள் அணிய தடை விதிக்க கோரிய வழக்கு தள்ளுபடி

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details